திமுக உட்கட்சி தேர்தல்... 6 மாதத்திற்கு அவகாசம் கோரும் தலைமை... அனுமதி மறுக்கும் தேர்தல் ஆணையம்..!
சென்னை: திமுக உட்கட்சி தேர்தலை நடத்த 6 மாசம் அவகாசம் கோரப்பட்டுள்ள நிலையில், அவ்வளவு காலம் கொடுப்பதற்கு தேர்தல் ஆணையம் மறுத்திருக்கிறது.
தேர்தல் ஆணைய விதிப்படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் திமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்னதாக உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனவரி மாதம் பொங்கலுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட மிக அதிக வாய்ப்புள்ளதாக், உட்கட்சித் தேர்தலை தள்ளி வைக்க விரும்புகிறது திமுக தலைமை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னர் உட்கட்சி தேர்தல் வைத்தால், பதவி கிடைக்காதவர்கள் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டுவார்கள் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
அவரது விருப்பப்படி அடுத்தாண்டு ஜுன் மாதம் வரை உட்கட்சித் தேர்தலை நடத்த அவகாசம் கோரி திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருக்கிறார். இந்நிலையில் டி.ஆர்.பாலு கேட்பதை போல் 6 மாதம் வரை அவகாசம் கொடுக்க மறுத்துள்ள தேர்தல் ஆணையம் முடிந்தவரை முன்னதாக நடத்தப்பாருங்கள் எனக் கறாராக கூறி அனுப்பிவிட்டது.
மேலும், கால அவகாசம் தருவது குறித்து உடனடியாக முடிவை அறிவிக்க இயலாது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டது. இதனால் திமுக உட்கட்சி தேர்தல் தொடர்பான பணிகளிலும் முதலமைச்சர் ஸ்டாலின் இனி வரும் நாட்களில் கவனம் செலுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீலகிரி எம்.பி. ஆ.ராசா தலைமையில் ஒரு குழுவை அமைத்து உட்கட்சி தேர்தல் பொறுப்பை அவர் ஒப்படைத்துவிடுவார் எனத் தெரிகிறது. திமுக தரப்பில் 6 மாதம் அவகாசம் கேட்கப்பட்டுள்ள சூழலில் 3 மாதம் தேர்தல் ஆணையம் அவகசாம் அளிக்கும் எனக் கணிக்கப்படுகிறது. அதன்படி வரும் ஜனவரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால், 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் திமுக உட்கட்சி தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
ஏற்கனவே கிளைக்கழக தேர்தலை திமுக தலைமை கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதமே நடத்தி முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ஒன்றியம், பேரூர், நகரம், மாநகரம், மாவட்ட பதவியிடங்களுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. தற்போது திமுகவில் ஒன்றிய, மாவட்ட பொறுப்பாளர்களாக இருப்பவர்கள் பலர் உட்கட்சி தேர்தலுக்கு பிறகு செயலாளர்களாக தேர்வாவார்கள்.
ஒன்றியச் செயலாளர், நகரச் செயலாளர் பதவியிடங்களை பிடிக்க கட்சியில் போட்டா போட்டி நிலவி வரும் நிலையில், உட்கட்சித் தேர்தலின் போது அடிதடிகளும் அரங்கேறும். இவை அனைத்தையும் லாவகமாக நிர்வகித்து உட்கட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய பொறுப்பு திமுக தலைமைக்கு காத்திருக்கிறது.