யோசித்து பேசுங்க சார்.. செருப்பை தலையில் தூக்கினோமா? சர்ச்சையை ஏற்படுத்திய லியோனி.. கடும் கொதிப்பு!
சென்னை: காலணிகளை தலையில் சுமந்த சமுதாயத்தினரை மேயராக்கியதுதான் முதல்வர் ஸ்டாலினின் திராவிடப் புரட்சி என்று திண்டுக்கல் லியோனி பேசியது இணையம் முழுக்க சர்ச்சையாகி வருகிறது. இவரின் பேச்சுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
ஆளும் திமுக அரசு ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிந்த நிலையில், திமுக சார்பாக ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக பேச்சாளர்கள் பலர் களத்தில் இறங்கி பல்வேறு இடங்களில் கூட்டம் நடத்தி வருகிறார்கள்.
இறந்து போன மூளை.. 5 பேரை காப்பாற்றிய 6 வயது குழந்தை.. நாட்டை உலுக்கிய
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கும்மிடி பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் மூலம் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
திமுக
இந்த கூட்டத்தில், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக தலைவர் மற்றும் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி பேசினார். இதில் அவர் பேசிய சில விஷயங்கள்தான் சர்ச்சையாகி உள்ளது. அவர் தனது பேச்சில், செருப்பை தலையில் தூக்கிக் கொண்டு இருந்த சமுதாயத்தை மேயராக்கியது திமுக. அந்த சமுதாயத்தை வணக்கத்திற்குரிய மாண்புமிகு மேயர் அவர்களே என்று அழைக்க வைத்தது திராவிடம்.
எதிர்ப்பு
இந்த புரட்சியை செய்தவர் முதல்வர் ஸ்டாலின் என்று தெரிவித்தார். அதேபோல் பெண்கள் அரட்டை அடித்துக் கொண்டு வெட்டியாக இருப்பார்கள் என்ற நிலையை மாற்றியது நாங்கள்தான். பெண்களுக்கு ஓட்டுரிமை கொடுத்தது நீதிக்கட்சி என்று பேசினார். இந்த நிலையில் பிறப்படுத்தப்பட்ட மக்களை செருப்பைத் தலையில் தூக்கிக் கொண்டு இருந்த சமுதாயம் என்று பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் சமூக வலைத்தளங்களில் வைக்கப்பட்டு வருகின்றன.
ஆளும் கட்சி
ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவர்.. பேசும் முன் கொஞ்சம் யோசித்து பேச வேண்டும். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை முன்னேற்றுவது என்பது வேறு, அதை தவறான வார்த்தைகளில் சொல்லிக்காட்டுவது என்பது வேறு. இதுவும் ஒரு வகையில் சாதி பிரிவினைதான். அதுவும் பாடநூல் கழகத்தில் தலைவராக இருப்பவர் கவனமாக பேச வேண்டும். இது தவறான முன்னுதாரணமாக மாறும் என்று பலர் விமர்சனம் வைத்துள்ளனர்.
லியோனி பேச்சு
இன்னும் சிலரோ.. அதே சமுதாய மக்கள்தான் திமுக கூட்டணிக்கு வாக்களித்தனர். அந்த கூட்டணி ஆட்சிக்கு வரவும் அதே செருப்பைத் தலையில் தூக்கிக் கொண்டு இருந்த சமுதாயம்தான் காரணம் என்பதை மறக்க வேண்டாம் என்று லியோனுக்கு எதிராக விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். முக்கியமாக விசிகவை சேர்ந்த உறுப்பினர்கள் சிலரும் லியோனி பேச்சை விமர்சனம் செய்துள்ளனர்.
சமூக நீதி
இது சமூக நீதி பேச்சு இல்லை. ஆளும் தலைமை இது போன்ற பேச்சுக்களை கண்டிக்க வேண்டும். லியோனி கொஞ்சம் யோசித்து பேசி இருக்கலாம். ஒரு காலத்தில் லியோனி என்றால் நகைச்சுவை, இன்றோ சர்ச்சை! தலையில் வைத்து செருப்பை சுமந்தவர்கள் யார் என தெரிந்த அவருக்கு, யார் அப்படி அவர்களை சுமக்க சொன்னார்கள் என சொல்லத் துணிவில்லையே! என்று நெட்டிசன்கள் பலர் விமர்சனம் செய்துள்ளனர். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
திமுக ராஜ்ய சபா
சமீபத்தில் ஆளும் திமுகவை சேர்ந்த ராஜ்ய சுபா எம்பி ஆர். எஸ் பாரதி, தாழ்த்தப்பட்டவர்கள் நீதிபதி ஆவது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று பேசியது விமர்சனங்களை சந்தித்தது. நெட்டிசன்கள், விசிகவினர் பலர் இதை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த நிலையில்தான் செருப்பை தலையில் தூக்கி கொண்டு இருந்த சமுதாயத்தை மேயராக்கியவர் ஸ்டாலின் என்று லியோனி பேசி புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார்.