வாயை விட்ட அண்ணாமலை.. பாயும் வழக்கு? மைக்கேல்பட்டி விஷயத்தில் ஆக்ஷனுக்கு ரெடியாகும் திமுக!
சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் பள்ளி மாணவி கடந்த 2022ம் ஆண்டு தற்கொலை செய்துக்கொண்டார். மத மாற்ற அழுத்தம் காரணமாகவே மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக அப்போதைய பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை கூறியிருந்தது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அண்ணாமலை மீது வழக்குப்பதிய வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ உச்சநீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது. அதில், மத மாற்றம் காரணமாக மாணவி தற்கொலை செய்யவில்லை என்று கூறியிருக்கிறது.

கடந்த 2022-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் மைகேல்பட்டியில் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யா எனும் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். விசாரணையில், பள்ளியில் நடந்த துன்புறுத்தல்தான் காரணம் என்றும், வீட்டில் சித்தியின் டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை செய்துக்கொண்டார் என்றும் தெரிய வந்தது.
ஆனால், மாணவி கட்டாய மத மாற்றம் காரணமாகவே தற்கொலை செய்துக்கொண்டார் என்று பாஜக பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்தது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கிடையாது. இருப்பினும் இந்த தற்கொலைக்கு நீதி வேண்டும் என்றும், குறிப்பாக கட்டாய மத மாற்ற தடை சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் வலியுத்தியது. அப்போது கட்சியின் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை, மாணவியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இப்படி இருக்கையில், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்த சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதில், மாணவியின் மரணத்திற்கு மத மாற்றம் என்பது காரணம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மக்களை மத ரீதியில் பிரிக்க முயற்சித்ததாக அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
"தஞ்சாவூர் மாணவி தற்கொலையை மதக் கலவரமாக மாற்றத் தூண்டியவர்கள் மீதும், ஆதாரமற்ற பொய்ப் புகார்களைப் பரப்பி சமூகப் பதற்றத்தை உருவாக்கிய பாஜக தலைவர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் தமிழக அரசு உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என எஸ்டிபிஐ விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
திமுவினர் பலரும் இதே கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர். எனவே விரைவில் அண்ணாமலை மீது வழக்கு தொடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications