அடுத்த ரத்தம் தயார்.. திமுகவின் எதிர்கால தலைவரே.. கைத்தட்டலை குவித்த தயாநிதி மாறன் பேச்சு.. பின்னணி
சென்னை: திமுக வாரிசு அரசியல் செய்வதாக பாஜகவினர் விமர்சனம் செய்து வரும் நிலையில் தான் இன்று நடந்த ஆர்ப்பாட்ட மேடையில், ‛‛இந்தி எதிர்ப்புக்கு அடுத்த ரத்தம் தயாராகிவிட்டது. திமுகவின் எதிர்கால தலைவரே'' என அக்கட்சியின் எம்பியான தயாநிதி மாறன் பேசியது கைத்தட்டலை குவித்தது.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்பட பாஜகவின் மூத்த தலைவர்கள் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என மாநில கட்சிகளை பொதுமேடைகளில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
சமீபகாலமாக இந்த விமர்சனம் அதிகரித்துள்ளது. இதபோல் பாஜகவில் உள்ள வாரிசு அரசியலையும் எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டி வருகின்றனர். இதனால் தற்போதைய சூழலில் பாஜகவினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே பரபரப்பாக செல்லும் விவாதங்களில் ஒன்றாக வாரிசு அரசியல், குடும்ப அரசியல் உள்ளது.

பாஜகாவால் விமர்சிக்கப்படும் கட்சிகள்
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி உள்பட பாஜக தலைவர்கள் சில கட்சிகளை மனதில் வைத்தே விமர்சனம் செய்கின்றனர். அதன்படி காங்கிரஸ், திமுக, தெலங்கானாவில் உள்ள சந்திரசேகரராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமீதி, பீகாரில் உள்ள லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், உத்தர பிரதேசத்தில் உள்ள அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, கர்நாடகாவில் உள்ள தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் தொடர்ந்து எதிர்க்கொண்டு வருகின்றனர்.

தயாநிதி மாறன் பேச்சு
இந்த விமர்சனத்துக்கு மத்தியில் தான் இன்று மத்திய பாஜக அரசு இந்தி மொழி திணிப்பை முயற்சிக்கிறது எனவும், ஒரே பொது நுழைவு தேர்வு அமல்படுத்த உள்ளதை கண்டித்து சென்னை வள்ளூவர் கோட்டத்தில் திமுகவின் இளைஞரணி, மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுகவின் இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்ட மேடையில் திமுகவின் மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றார். இதில் எம்பியாக உள்ள தயாநிதி மாறனும் பங்கேற்று பேசினார். அப்போது, ‛‛பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தாய் மொழி குஜராத்தி. ஆனால் இந்தியாவை ஆள இந்தி மொழி தேவை என்பதால் இந்தியை திணிக்க்கிறார். மோடி, அமித்ஷாவின் பருப்பு தமிழகத்தில் வேகாது'' என்றார்.

எதிர்கால தலைவரே
முன்னதாக தயாநிதி மாறன் பேச்சை துவங்கியபோது, ‛‛இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொதுத்தேர்வு திட்டத்தை அறிவித்துள்ள ஒன்றிய அரசின் அறிவிப்பை திரும்ப பெறக்கோரி திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்திய திமுக இளைஞரணி செயலாளரும், கழகத்தின் எதிர்கால தலைவருமான சகோதரர் உதயநிதி ஸ்டாலின்'' என பேசினார். இந்த வேளையில் அங்கு கூடியிருந்தவர்கள் கைகளை தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

அடுத்த ரத்தம் தயாராகிவிட்டது
அதேபோல் தயாநிதி மாறன் தனது பேச்சை முடிக்கும்போதும் கூட, ‛‛பாருங்கள் இந்தி திணிப்பை எதிர்க்க எங்களின் இளைஞரணி செயலாளர் வந்துவிட்டார். அடுத்த ரத்தம் தயாராகி விட்டது. இந்திக்கு எதிராக அண்ணா ஏந்திய கொடி, கலைஞர் ஏந்திய கொடி, தளபதி ஸ்டாலின் ஏந்திய கொடியை தற்போது உதயநிதி ஏந்தி விட்டார். மோடி, அமித்ஷாவே உங்கள் பருப்பு இங்கு வேகாது'' என பேசியபோதும் அங்கு திமுகவினர் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.












Click it and Unblock the Notifications