நீட் தற்கொலை.. இந்தியாவிலேயே இங்கு தான் அதிகம்.. திமுக மீது அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
சென்னை: நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் திமுக அரசு முயற்சிகள் போதவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி 34-ஆவது தொடக்க விழாவை முன்னிட்டு கட்சிக் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு கொடியேற்றினார். இதனைத்தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாட்டாளி மக்கள் கட்சி 34-ஆவது தொடக்க விழாவைக் கொண்டாடும் இந்த வேளையில் கட்சியின் வளர்ச்சிக்காக எந்த எதிர்பார்ப்புமின்றி உழைத்து வரும் நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
Recommended Video

பாமக சாதனை
தமிழ்நாட்டிற்காக ஏராளமான நீர் மேலாண்மை திட்டங்களை அரசிடம் போராடி செயல்படுத்த வைத்த கட்சி பாமக. கல்விக்காக பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளோம். சமச்சீர் கல்வி என்ற பெயரே எங்களால் தான் கொண்டு வரப்பட்டது. நுழைவுத் தேர்வு ரத்து செய்ய போராட்டங்களையும் நடத்தியுள்ளோம். அதேபோல் மத்திய அமைச்சராக இருந்தபோது 108 ஆம்புலன்ஸ், போலியோ ஒழிப்பு என எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

பாமக 2.0
இன்றைய சூழலில் பாமக 2.0 என்ற திட்டத்தை வெளியிட்டு வருகிறோம். இதன்மூலம் மக்களை அணுகி, அனைவருக்கும் வளர்ச்சி, அனைவருக்கும் உரிமை என்ற முழக்கத்தோடு மக்களை சந்திப்போம். 2026ல் தமிழ்நாட்டில் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. நிச்சயம் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக பாமக நிச்சயம் இருக்கும் என்று தெரிவித்தார்.

அதிமுக விவகாரம்
தொடர்ந்து அதிமுக விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ், அதிமுகவில் நடப்பது உட்கட்சி பிரச்னை. அது இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. அதிமுகவில் ஏற்பட்ட பிளவுக்கு திமுக தான் காரணம் என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அவர்களுக்கு என்ன பிரச்னை என்று தெரியும் என்று தெரிவித்தார்.

திமுக மீது விமர்சனம்
இதனைத்தொடர்ந்து திமுக ஆட்சி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கொரோனா பரவலை சிறப்பாக கையாண்டது. ஆனால் நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவின் முயற்சிகள் போதவில்லை. நீட் தேர்வால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக தற்கொலைகள் நடக்கிறது. அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் 80 சதவிகிதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்று விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications