சட்டம் - ஒழுங்கு பிரச்சினை தொடர்ந்தால்.. திமுக ஆட்சி கலைக்கப்படும்.. ஜெயக்குமார் தாக்கு!
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை தொடர்ந்தால் திமுக ஆட்சி கலைக்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுகவின் கொடி, சின்னம், போலி உறுப்பினர் அட்டை, பணம் வசூல் உள்ளிட்ட மோசடி செயல்களில் ஈடுபட்டதாக கேசி பழனிச்சாமி மீது அதிமுக சார்பாக புகாரளிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து நிருபர்கள் எழுப்பினர். அதற்கு, தமிழ்நாடு ஒரு அமைதி பூங்காவாக இருந்தது. ஆனால் தற்போது பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பொதுவாக மதக் கலவரம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அரசின் கடமை.
நாடே இல்லாத 'ராஜாவுக்கு’ 9 மந்திரிகள்.. பந்தாடப்பட்ட பண்ருட்டி.. ஓபிஎஸ்ஸை கிண்டல் செய்த ஜெயக்குமார்!
திமுக ஆட்சி கலைக்கப்படும்
மத கலவரங்கள் உள்ளிட்ட செயல்களை ஆரம்ப காலத்திலேயே ஒடுக்க வேண்டும். தீவிரவாத, அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். ஆனால் திமுக ஆட்சியில் அதிமுகவை இரும்புக்கரம் கொண்டு அடக்க நினைக்கிறது, தீவிரவாதிகளுக்கு கரும்புக்கரம் கொடுத்து வருகிறது. இப்படியே சென்றால், திமுக 1989 - 1991 ஆட்சி போல், இப்போதும் கலைக்கப்படும். அதிமுக ஆட்சியில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்தவித அமைப்புகளுக்கும் அனுமதி வழங்கவில்லை. ஆனால் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு கூட திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்தார்.
அமைச்சர்கள் மீது விமர்சனம்
தொடர்ந்து அமைச்சர் பொன்முடி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், பெரிய கருப்பன், கேஎன் நேரு, ராஜகண்ணப்பன் என ஒவ்வொரு அமைச்சரும் பொதுமக்களை இழிவுபடுத்தி வருகின்றனர். இவையனைத்தையும் மக்கள் பார்த்து வருகிறார்கள். இதனை பார்த்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அமைதியாக இருக்கிறார் என்று விமர்சித்தார்.
அதிமுக ஆட்சியில் பேரணி
தொடர்ந்து, 2017 மற்றும் 2018ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, 2017ம் ஆண்டு சென்னையில் உள்ள ஒரு மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வதற்காக அனுமதி கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் நடப்பதற்கும், ஒரு இடத்தில் மட்டும் நடப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நிச்சயமாக அதிமுக ஆட்சியில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
பதிலளிக்க மறுப்பு
அதேபோல், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்ட விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு, ஜெயக்குமார் பதில் அளிக்க மறுத்து செய்தியாளர் சந்திப்பை முடித்து வெளியேறினார்.