ம்ஹூம்.. கடைசிவரை வாயே திறக்காத ஸ்டாலின்.. ஊர் ஊராக லிஸ்ட் போடும் ராமதாஸ்.. இப்டி ஒரு அரசியலா?
திமுக, பாமகவை விமர்சிக்காமல் பிரச்சாரம் செய்து வருகிறது
சென்னை: திமுகவின் ஒவ்வொரு செயலும், சொல்லும் தேர்தலின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்து கொண்டே போகிறது என்று அரசியல் வல்லுநர்கள் சொல்கிறார்கள்.. காரணம், பாமக மீதான திமுகவின் காய்நகர்த்தல்கள்தானாம்..!
இந்த முறை தேர்தலில் பாமகவை ஆரம்பத்தில் இருந்தே திமுக கண்டுகொள்ளவில்லை.. கூட்டணிக்குள் இழுக்க முயற்சி நடப்பதாக ஒரு பேச்சு வந்தது..
ஆனால், துரைமுருகன் மட்டுமே இதில் முயற்சி மேற்கொண்டாரே தவிர, வேறு யாரும் அவ்வளவாக ஆர்வம் காட்டப்படவில்லை என்று தெரிகிறது. அதேபோல, பாமக தரப்பில் அன்புமணிக்கும் திமுகவுடன் கூட்டணி வைக்க ஒரு எண்ணம் இருந்ததாக சொல்லப்பட்டது.
கடினம்
இறுதியில் எந்தவித அனுமானத்துக்கும் இடமில்லாமல், அதிமுகவுடனான கூட்டணியை தக்க வைத்துள்ள பாமக.. பல சாதகமான தொகுதிகளிலும், சேப்பாக்கம் போல கடினமான தொகுதிகளிலும் களப்பணியில் இறங்கி வருகிறது.
பிரச்சாரம்
இந்நிலையில், பாமகவின் பிரச்சாரம் முழுவதும் திமுகவை குறி வைத்தே நடந்து வருகிறது. டாக்டர் ராமதாஸ் அன்புமணி, உட்பட பாமக பிரமுகர்கள் பலரும் திமுகவை சாடியே பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.. "திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு அதிகரிக்கும்.. எதுவுமே மிஞ்சாது... சட்டம் - ஒழுங்கு கெட்டுவிடும். வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது" என்று ஒரே மாதிரியான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.
பிரசாந்த் கிஷோர்
அதிலும், திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதியைவிட, அளவுக்கு அதிகமாக பிரசாந்த் கிஷோரையும் சேர்த்தே விமர்சித்து வருகிறதாம் பாமக.. இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தால், திமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுக்கும்போது பல மூத்த தலைகள், அதிருப்திக்கு உள்ளாகி உள்ளனர்.. இதற்கு காரணமான பிரசாந்த் கிஷோரை சாடும்போது, அதிருப்தி சீனியர்கள் பாமக பக்கம் ஆதரவு அலை வீச வாய்ப்பாக அமையும் என்பதாலேயே பி.கே.வை பாமக விமர்சிப்பதாக தெரிகிறது.
வேட்பாளர்கள்
அதுமட்டுமல்ல, பாமக போட்டியிடும் முக்கிய இடங்களில் திமுக ஸ்டிராங் வேட்பாளரை நிறுத்தி உள்ளது.. இதனால் சில தொகுதிகளில் பாமக திணறும் நிலைக்கு வந்துள்ளதால், திமுகவையே பாமக தரப்பு விமர்சித்து வருவதாக கூறப்படுகிறது..
சத்தம்
ஆனால், திமுகவிலோ, பாமக என்ற பேச்சையே எடுக்காமல் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.. கடந்த தேர்தலில், எத்தனையோ புகாரை பாமக மீது அடுக்கிய திமுக, இந்த முறை சத்தமே இல்லாமல், பாமகவை ஒரு கட்சியாகவே பொருட்படுத்தாமல் அதிமுகவை மட்டுமே குறி வைத்து வருகிறது.. தேவையில்லாமல் பாமகவை பற்றி பேசி, அந்த கட்சிக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்றும் திமுக கருதுகிறதாம்.. எனவே, திமுகவை பாமக இழுத்து வந்தாலும், திமுக வாயே திறக்காமல் ஸ்கோர் செய்து வருவதாகவே தெரிகிறது..!