தலைவருக்காக விட்டுக் கொடுங்க! சமாதானம் பேசும் அன்பகம் கலை -கே.என்.நேரு! அண்ணா அறிவாலயம் ரவுண்ட் அப்!
சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் காரணமாக அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயம் மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது.
தலைமை விரும்பும் மாவட்டச் செயலாளர்களுக்கு எதிராக வேட்பு மனு கொடுத்தவர்களை அழைத்து அன்பகம் கலை, கே.என்.நேரு, ஆ.ராசா, உள்ளிட்டோர் சமாதானம் பேசி அனுப்பி வைக்கின்றனர்.
ஆள் பலம் இல்லாத நிர்வாகிகளிடம் எந்த பேச்சுவார்த்தைக்கும் இவர்கள் செல்வதில்லை. போட்டி என்று வந்தால் படை பலத்தோடு வெற்றிபெற்று விடுவார் என்ற நிலையில் இருப்பவர்களிடம் மட்டுமே சமாதானம் பேசப்படுகிறது.

மாவட்டச் செயலாளர்
திமுகவில் உட்கட்சித் தேர்தல் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், கடந்த 3 நாட்களாக மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் களை கட்டியுள்ளது. அமைச்சர் பதவிக்கு நிகரான பதவி என்பதால் மாவட்டச் செயலாளர் பதவிக்கு திமுகவில் எப்போதுமே கடும் போட்டி நிலவும். கடந்த வியாழக்கிழமை தொடங்கிய தேர்தல் நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.

முட்டி மோதும் டீம்
இதனிடையே நெல்லை, தென்காசி, தேனி, கோவை, தருமபுரி, மதுரை, கடலூர், ஆகிய மாவட்டங்களில் போட்டி சற்று கடுமையாக உள்ளது. நெல்லையில் ஆவுடையப்பனுக்கு எதிராக ஒரு டீம் காய் நகர்த்தி வருகிறது. தென்காசியில் சிவபத்மநாபனுக்கு எதிராக பலர் முட்டி மோதுகின்றனர். தேனியில் வடக்கு மாவட்டச் செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணனுக்கு எதிராக கச்சை கட்டி நிற்கிறார் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார்.

கடும் போட்டி
கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு ராமச்சந்திரன் மீண்டு போட்டியிடுகிறார். தருமபுரியில் தடங்கம் சுப்ரமணிக்கு எதிராக பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன் வேட்புமனு கொடுத்திருக்கிறார். கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே.வுக்கு எதிராக ஐயப்பன் எம்.எல்.ஏ. தரப்பு முட்டி மோதி வருகிறது. மதுரையை பொறுத்தவரை வடக்கு மாவட்டச் செயலாளர் மணிமாறனுக்கு எதிராக ஒன்றியச் செயலாளர் ஒருவர் வேட்பு மனு கொடுத்திருக்கிறார். இதேபோல் மதுரை மாநகர் செயலாளர் பதவிக்கு தளபதி, செந்தில்குமார் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

பரஸ்பர புகார்
இப்படி பல மாவட்டங்களிலும் சிக்கல், உட்கட்சி மோதல் என அண்ணா அறிவாயலத்தை அதிர வைக்கும் வகையில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தலைமை விரும்பும் மாவட்டச் செயலாளர்களுக்கு எதிராக வேட்பு மனு கொடுத்தவர்களை அழைத்து அன்பகம் கலை, கே.என்.நேரு, ஆ.ராசா, உள்ளிட்டோர் சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார்கள். பலர் அவர்கள் சமாதானத்தை ஏற்கிறார்கள், பலர் பிறகு எதுக்கு மாவட்டச் செயலாளர் தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்கேள்வி கேட்டுவிட்டு புறப்படுகிறார்கள்.

கம்பம் ராமகிருஷ்ணன்
உதாரணத்துக்கு தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு கம்பம் ராமகிருஷ்ணனை எதிர்த்து ஜெயக்குமார் என்பவர் வலிமையான டீமோடு நேற்று முன் தினம் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார். அவரிடம் சமாதானம் பேசிய அறிவாலயம் குழுவினர் தலைவருக்காக விட்டுக்கொடுங்க என பேசி மனதை கரைத்தனர். அவரும் தலைவர் பெயரைச் சொல்கிறார்களே என்பதற்காக அமைதியாக அண்ணா அறிவாலயத்தை விட்டு புறப்பட்டார்.

கே.என்.நேரு
தேர்தல் முடிவுற்ற அடுத்த சில மாதங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் மீதான புகார்களும், பஞ்சாயத்துக்களும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர் தரப்பினர் மனம் கோனாத வகையில் அவர்களை அழைத்து பேசும் பொறுப்பை திமுக முதன்மை செயலாளர் நேருவுக்கு ஸ்டாலின் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications