புலம்பல்..திறமையில்லை..திமுக எப்போதுமே அதிமுகவிற்கு பகையாளிதான்..போட்டு தாக்கும் ஜெயக்குமார்
சென்னை: திமுகவுடன் அண்ணன், தம்பி உறவு எல்லாம் எப்போதோ முடிந்துவிட்டது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுகவை இயக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என்றும் திமுக எப்போதுமே எங்களுக்கு பகையாளிதான் என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர் 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதியன்று அதிமுகவை தொடங்கினார். அதிமுக தொடங்கப்பட்டு பொன்விழா கொண்டாடியுள்ளது.
கடந்த பல ஆண்டுகாலமாகவே திமுகவும் அதிமுகவும் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. தற்போது திமுக ஆளுங்கட்சியாக உள்ள நிலையில் அதிமுக எதிர்கட்சியாக உள்ளது.

பிளவு பட்ட அதிமுக
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு டிடிவி தினகரன் தலைமையில் சிலர் பிரிந்து சென்றாலும் அதிமுக நான்காண்டு கால ஆட்சியை நிறைவு செய்தது. ஒற்றைத்தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சட்டசபையிலும் இந்த பிரச்சினை எதிரொலித்தது.

கே.என் நேரு பேச்சு
சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் கட்சியினர் மத்தியில் பேசிய கே.என்.நேரு, தமிழகத்தில் எதிர்கட்சியான அதிமுக இன்றைக்கு பிளவுப்பட்டுக் கிடக்கிறது. நான் நீ என்ற போட்டியில் அவர்கள் பிளவுப்பட்டுக் கிடக்கின்றனர். கடந்த காலங்களில் அதிமுக உடனான போட்டி என்பது அண்ணன், தம்பி போட்டி என்று கூறினார். அதிமுகவை பாஜக இரண்டு, மூன்றாக பிரித்துவைத்துள்ளது. வருகின்ற தேர்தலில் தேவையான இடங்களைப் பெறுவதற்காக இவ்வாறு பிரித்து வைத்துள்ளனர் என்றும் கூறினார்.

பாஜக தடுக்கிறது
அதிமுகவின் இடத்தை பாஜக பிடிக்க வேண்டும் என்பதற்காக அவர்களை ஒன்றுசேரவிடாமல் செய்து, பாஜகவினர் வருகின்ற நிலை இருந்துகொண்டிருக்கிறது. இதனால், நாடாளுமன்றத் தேர்தலில் 10 இடங்களில் வெற்றி பெற்று விடுவோம், அதன்பிறகு சட்டமன்றத் தேர்தலில் பார்த்துக் கொள்கிறோம் என்று அவர்கள் சவால்விடும் நிலைமை உள்ளதாகவும் கூறியிருந்தார்.

அண்ணன் தம்பிகளா?
அதிமுகவும் திமுகவும் அண்ணன் தம்பிகள் என்று கே.என் நேரு கூறியது பற்றி ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார். திமுகவுடன் அண்ணன், தம்பி உறவு எல்லாம் 1972லேயே முடிந்துவிட்டது. இனிமே எந்த உறவும் கிடையாது என்றும் திமுகவை பொறுத்தவரை எப்போதுமே எங்கள் பகையாளிதான் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

தேர்தல் கூட்டணிதான்
பாஜக யார் எங்கள் கட்சியை மூக்கை நுழைக்க? அதிமுகவை இயக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. அப்படி செய்யவும் மாட்டார்கள். அதிமுகவை பொறுத்தவரை தற்போது பிரதான எதிர்கட்சிதான். நாளைக்கு ஆளுங்கட்சி என்றால் அதிமுகதான். தேர்தல் சமயத்தில் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி என்று கூறினார்.

தூங்காத ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலினை அமைச்சர்கள் பலரும் தூங்க விடாமல் செய்கின்றனர். பல ஜனநாயக விரோத செயல்களை செய்கின்றனர். கே.என். நேரு இப்படி புலம்பிக்கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் நேரு புலம்பினால் இன்னொரு பக்கம் ஆற்காடு வீராசாமி புலம்புகிறார். மத்திய அரசு அதிகாரிகளுக்கு தமிழக அரசு அதிகாரிகள் பயப்படுவதாக கூறியுள்ளார். அப்போது இருந்து இப்போது வரை அதே அதிகாரிகள்தான் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

வேலை வாங்கத்தெரியலை
அதிகாரிகளை வைத்துதான் வேலை வாங்க வேண்டும். தற்போது உள்ள அரசுக்கு வேலை வாங்கத் தெரியவில்லை என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். நிர்வகத்திறமையில்லாத மோசமான திராவிட மாடல் ஆட்சிதான் இந்த திமுக ஆட்சி என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications