அனல் பறக்கும் தஞ்சை தெற்கு.. ஸ்டாலின் உத்தரவை மீறியவர்களுக்கு தக்க நேரத்தில் செக்
தஞ்சாவூர்: திமுகவின் 15 வது உள்கட்சித் தேர்தல் முடிவுகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில் நேற்று வெளியான புதிய மாவட்ட நிர்வாகிகள் பட்டியலில் தஞ்சை தெற்கு மாவட்டம் உட்பட 7 மாவட்டங்களின் செயலாளர்கள் மாற்றப்பட்டு உள்ளார்கள்.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திமுகவில் உள்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் திமுகவின் 15 வது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. கிளைக் கழகம், பேரூர், நகரம், ஒன்றியம், மாநகரம், வட்டம், பகுதி போன்ற பல்வேறு பகுதிகளுக்கான தேர்தல் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் உட்கட்சித் தேர்தலில் முக்கிய நிகழ்வான மாவட்ட செயலாளர், மாவட்டத் தலைவர், துணைத் தலைவர், மாவட்ட துணை செயலாளர்கள், பொருளாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு நேற்றிரவு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
ஒன்றியச் செயலாளரும் அவரே.. மாவட்டச் செயலாளரும் அவரே.. யார் சாய்ஸ் இது? கோவை மாவட்ட திமுக ருசிகரம்!
வேட்புமனுத் தாக்கல்
இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய நிலையில் நேற்றுடன் நிறைவடைந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நடத்தப்படும் முதல் மாவட்ட செயலாளர் தேர்தல் என்பதால் இதில் கடும் போட்டி நிலவியது. மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் அண்ணா அறிவாலயத்தில் நேரில் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
மாறிய நிர்வாகங்கள்
இதில் 7 மாவட்டங்களின் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதில் தஞ்சை தெற்கு மாவட்டமும் அடக்கம். தஞ்சாவூர் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஏனாதி பாலசுப்ரமணியனுக்கு மாற்றாக தற்போதைய பட்டுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. அண்ணாதுரை அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
யார் இந்த அண்ணாதுரை?
கடந்த 20 ஆண்டுகளாக பட்டுக்கோட்டையில் உதிக்காமல் இருந்த சூரியன் கடந்த ஆண்டு மீண்டும் அண்ணாதுரை வாயிலாக உதித்தது. 15 ஆண்டுகளாக திமுக கூட்டணி கட்சிக்கே பட்டுக்கோட்டையை ஒதுக்கியது. கடந்த 1989 ஆம் ஆண்டு திமுக எம்.எல்.ஏவாக தேர்வான சீனியர் உடன்பிறப்பான அண்ணாதுரை 31 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏவாகி இருக்கிறார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் திமுகவின் பல்வேறு கீழ்நிலை பொறுப்புகள், ஊராட்சித் தலைவர் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
ஏன் மாற்றம்?
முதல் முறை எம்.எல்.ஏவாகி 31 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்து கட்சிப் பணியாற்றிய அண்ணாதுரைக்கு அங்கீகாரம் வழங்கவே திமுக தலைமை இந்த பவர்ஃபுல்லான மாவட்ட செயலாளர் பதவியை கொடுத்திருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால், பட்டுக்கோட்டை சுற்றுவட்டார உடன்பிறப்புகளிடம் விசாரிக்கையில், வேறு சில காரணம் கூறப்படுகின்றன. முன்னாள் எம்.எல்.ஏவும் மாவட்ட செயலாளருமாக இருந்த ஏனாதி பாலசுப்பிரமணியனின் செயல்பாடுகள் கட்சித் தலைமையை அதிருப்திக்கு ஆளாக்கியதாலே அவரை வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டாம் என தலைமை உத்தரவிட்டதாம்.
எம்பிக்கள் லாபி
தஞ்சை மாவட்ட திமுகவில் முன்னாள் மத்திய அமைச்சர்களும் தற்போதைய திமுக எம்.பிக்களுமாக இருக்கும் இருவர் தனித்தனி கோஷ்டிக்களை வைத்து லாபி செய்து வருவதாக கூறப்படுகிறது. இதில் ஒரு தரப்பை சேர்ந்தவர்களின் ஆதிக்கமே தஞ்சை தெற்கில் அதிகம் இருந்திருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை திமுகவில் உயர்பொறுப்பில் இருக்கும் இருக்கும் எம்.பியின் ஆதரவாளர் என்பதால் அவருக்கு இப்பொறுப்பு தேடி வந்திருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
அதிராம்பட்டினம் நகராட்சி
இதுமட்டுமின்றி அதிராம்பட்டினம் நகராட்சி துணைத் தலைவர் பொறுப்பை திமுக தலைமை கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கியது. ஆனால், ஏனாதி பாலசுப்பிரமணியத்தின் ஆதரவாளராக கூறப்படும் அதிராம்பட்டினம் திமுக நகர செயலாளர், தலைமையின் உத்தரவை மீறி கவுன்சிலர்களை வளைத்து தானே நகராட்சித் துணைத் தலைவராக பதவியேற்றுக்கொண்டார். இதனை கண்டித்து நகராட்சி முன்பாக போராட்டமும் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்தும் அவர் பதவி விலகவில்லை என்று கூறப்படுகிறது.
திமுக தலைமை கோபம்
இதனால் அதிருப்தி அடைந்த திமுக தலைமை ஏனாதி பாலசுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி தலைமையின் உத்தரவை மீறிய அதிராம்பட்டினம் திமுக நகர செயலாளருக்கு செக் வைக்கும் விதமாக அவரது எதிர் கோஷ்டியில் இருந்த அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் தலைவர் எஸ்.ஹெச்.அஸ்லம் மாவட்ட பொருளாளாராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதன் காரணமாக தஞ்சை தெற்கு மாவட்ட திமுக அரசியல் அனல் பறக்கிறது.