"மேயர்" உதயநிதி ஸ்டாலின்.. கனவில் திமுக.. நாலா பக்கமும் கேட்டை போடும் அதிமுக!
சென்னை: என்னதான் திராவிட முன்னேற்ற கழகத்தை 'வாரிசு கட்சி' என்று விமர்சனம் செய்தாலும் கூட, அக்கட்சியில் ஸ்டாலினின் வளர்ச்சியானது படிப்படியானது, அருமையானது. மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக என்று நகர்ந்து இன்று கழக தலைவராகி, நாளை தமிழக முதல்வராகும் முயற்சியிலும் இருக்கிறார் அவர்.
தன்னைப் போலவே தனது மகன் உதயநிதியையும் சென்னையின் மேயராக்கிட வேண்டும் எனும் ஆசை ஸ்டாலின் மற்றும் திருமதி ஸ்டாலின் இருவருக்குமே வந்திருக்கிறது என்கிறார்கள் அக்கட்சியின் சீனியர்கள். சமீபத்தில்தான் அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் பதவியில் அமரவைக்கபட்டார்.
இந்த நிலையில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி என இரு தொகுதி இடைத்தேர்தல்களில் ஏதோ ஒரு தொகுதியில் அவரை போட்டியிட வைக்கலாமென்று கழக சீனியர்கள் சிலர் கருத்துச் சொல்லி, கவனம் ஈர்க்கப் பார்த்தனர். ஆனால் மறுத்து தலையசைத்துவிட்டார் ஸ்டாலின். தன்னைப் போலவே தன் மகனையும் மேயர் பதவியில் அமர வைத்து அழகு பார்ப்பதே அவரது விருப்பமாக இருக்கிறது.

மேயர் பதவிக்கு
எனவேதான் உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. அதில் சென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு உதயநிதியை போட்டியிட வைக்கும் திட்டத்தில் ஸ்டாலின் இருக்கிறாராம். இது உதய்யிடமும் சொல்லப்பட்டு, அவரும் அதற்கு ஓ.கே. சொல்லிவிட்டார். உதயநிதி அப்படி வேட்பாளராகும் பட்சத்தில், தி.மு.க. இளைஞரணியின் ஒட்டுமொத்த டீமும் வெறித்தனமாக சென்னையில் அவருக்காக சுற்றிச் சுழன்று பணியாற்ற தயாராக இருக்கிறதாம்.

ஆப்பு வைக்க அதிமுக ரெடி
ஆக தி.மு.க.வின் கனவு இப்படியாக இருக்கிறது. இந்த சூழலில், ஸ்டாலினின் இந்த கனவை எப்படியோ ஸ்மெல் செய்துவிட்டார் தமிழக முதல்வர் இ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கமானவரான ஒரு அமைச்சர். இதையடுத்து திமுக கனவுக்கு ஆப்பு வைக்கும் வகையில் திட்டம் தயாரானதாம் அதிமுக தரப்பில்.

பெண்களுக்கு ஒதுக்கீடா
அதாவது சென்னை மாநகராட்சியை இந்த முறை ‘பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது' என அறிவித்துவிடலாமா? என்று ஒரு ஆலோசனையை நடத்தினார்களாம் ஆனால் கவலையேபடாமல் ஸ்டாலின் தன் மனைவியையோ, அல்லது மருமகளையோ கூட நிறுத்தி ஜெயிக்க வைத்துவிடுவார். நாமாகவே அக்குடும்பத்தில் ஒரு புது பெண் அரசியல் தலைவரை உருவாக்கி, முதல்வர் நாற்காலி வரை கொண்டாந்து நிறுத்திய கதையாகிடும் என்று அதை கைவிட்டு விட்டனராம்.

தலித்துகளுக்கு ஒதுக்கீடா
‘சென்னை மாநகராட்சியை இந்த முறை தனித்தொகுதியாக்கிடுவோம். வேறு வழியில்லாமல் கட்சியிலிருந்து ஏதாவது ஒரு தலித்தைத்தான் அவர்கள் நிறுத்தியாக வேண்டும். தி.மு.க.வின் ஸ்டார் வேட்பாளராக இல்லாமல் அந்த வேட்பாளர் இருக்கும் நிலையில், நாம முழு முயற்சியா பிரசாரம் பண்ணி, டஃப் கொடுத்து ஜெயிக்க முயற்சிப்போம்' என்று ஆலோசிக்கப்பட்டுள்ளதாம்.
இப்படி எல்லா வகையிலும் கேட்டைப் போட தயாராகி வருகிறதாம் ஆளும் தரப்பு.. எனவே இந்த மேயர் பதவிக்கான மோதல் இந்த முறை செம களேபரமாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.
- ஜி.தாமிரா












Click it and Unblock the Notifications