அடுத்த அதிரடி.. திமுக அமைச்சர் வெளியிட்ட 2 முக்கிய அறிவிப்புகள்.. துரிதமாகும் பணிகள்.. பரபர பேட்டி
அமைச்சர் சேகர்பாபு வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு 2 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்
சென்னை: வள்ளலாரின் அரும்பணிகளை பெருமைப்படுத்தும் விதமாக அடுத்தடுத்த 2 அறிவிப்புகளை திமுக அமைச்சர் சேகர்பாபு இன்று வெளியிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது முதல் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள அமைச்சர் சேகர் பாபு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக, கோவில்களை சீரமைப்பது, புனரமைப்பது போன்ற நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.. அறநிலையத்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.

கோவில் நிலம்
இதில், கோவில் நிலங்கள் மற்றும் அதன் சொத்து விவரங்களை பொதுமக்கள் பார்க்கும் வகையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோவில் நிலங்களை மீட்பது, கோவிலுக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு முறையாக வாடகை வசூலிப்பது போன்றவை குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

அர்ச்சகர்கள்
ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.1,000, திருக்கோயில்களின் பாதுகாப்பிற்கென 10,000 பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம், பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவதற்காக மொட்டை அடிப்பதற்கு இனி கட்டணம் வசூலிக்கப்படாது போன்ற அதிரடிகள் மக்களால் வரவேற்கப்பட்டு வருகின்றன. அதனால்தான் முதல்வர் அமைச்சர் சேகர்பாபு மனம்திறந்து பாராட்டியிருந்தார்..

பாராட்டு
''சேகர்பாபு என்ற அழைப்பதைவிட, செயல்பாபு என்று தான் அழைக்க வேண்டும்... சட்டமன்றத்தில் ஒரு திட்டத்தை அறிவித்து ஒரு வாரம் தான் ஆகிறது. சட்டமன்றம் கூட இன்னும் நிறைவடையவில்லை. ஆனால், அதற்குள் அந்த திட்டத்தை நிறைவேற்ற காரணமாக இருப்பவர் சேகர் பாபுதான்... 'எள் என்று சொன்னால் எண்ணெயாக இருப்பார்கள்' என்று சொல்வார்கள்.. சேகர்பாபுவை பொறுத்தவரை, 'எள்' என்று கூட சொல்ல தேவையில்லை. அதற்கு முன்பே எண்ணெயாக மாறக்கூடியவர்" என்று முதல்வர் ஸ்டாலினும் பாராட்டியிருந்தார்.

வள்ளலார்
அந்த வகையில், இப்போதும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. சில தினங்களுக்கு முன்பு, சேகர்பாபு ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், அருட்பிரகாச வள்ளலார் புகழை போற்றும் வகையில் வள்ளலார் சர்வதேச மய்யம் வடலூரில் அமைக்கப்படும் என்று கூறியிருந்தார். வள்ளலாரின் பிறந்தநாளான இன்று அதே அறிவிப்பை உறுதி செய்துள்ளார்.

மரியாதை
ராமலிங்க அடிகளாரின் 199வது அவதார தினத்தை முன்னிட்டு சென்னை ஏழு கிணற்றில் வள்ளலார் வாழ்ந்த இடத்தில் அவரது படத்திற்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.. பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் சொன்னதாவது: "அன்னை தமிழில் வழிபாடு நடத்தும் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.. ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படியே கோவில்களில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன..

தேவையற்றது
ஆனால், வார இறுதி நாட்களிலும் கோவில்களை திறக்க வலியுறுத்தி பாஜகவினர் போராட்டம் நடத்துவது தேவையற்றது. வள்ளலாரின் அரும்பணிகளை பெருமைப்படுத்தும் விதமாக விரைவில் டெண்டர் கோரப்பட்டு 72 ஏக்கர் பரப்பளவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும்.. சென்னை ஏழு கிணற்றில் ராமலிங்க அடிகளார் வாழ்ந்த வீடு, அரசு சார்பில் புனரமைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications