மீண்டும் தலைநகரிலேயே பவர்கட்- நள்ளிரவில் நேரடியாக களத்தில்இறங்கிய செந்தில் பாலாஜி..குவியும் பாராட்டு
சென்னை: மின்வெட்டு தொடர்பாக மூத்த செய்தியாளர் ஆர்கே ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டில் பதிவிட்ட சில மணி நேரத்திலேயே அமைச்சர் செந்தில் பாலாஜியே நேரடியாகத் தலையிட்டு பிரச்சினையைச் சரி செய்துள்ளார்.
கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் மின்வெட்டு சிக்கல் எந்தளவு இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். 2011 சட்டசபைத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கு மின்வெட்டும் ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின்வெட்டு பிரச்சினை படிப்படியாகக் குறைந்தது. கடைசி வரையிலும் மின்வெட்டு பிரச்சினை எழாமல் அதிமுக அரசு பார்த்துக் கொண்டது.
கையில் குச்சியுடன், காட்டுக்குள் நுழைந்த திமுக அமைச்சர்.. மொத்தம் 15 கிமீ.. மலைத்த மலைமக்கள்.. சபாஷ்
மீண்டும் மின்வெட்டு
இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் பரவலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாக இணையத்தில் பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் கடந்த 9 ஆண்டுகளாக மின் பாரமரிப்பு பணிகள் முறையாக நடைபெறவில்லை என்று குற்றஞ்சாட்டிய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 10 நாட்கள் டைம் கொடுங்கள் தமிழ்நாடு முழுவதும் பாரமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, மின்வெட்டு ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம் என உறுதி அளித்தார்.
பாரமரிப்பு பணிகள்
அதன்படி கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு முழுவதும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இருப்பினும், அப்போதும்கூட மின்வெட்டு பிரச்சினை முடியவில்லை. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அறிவிக்கப்படாத மின்தடை அவ்வப்போது ஏற்படுவதாக புகார்கள் வந்துகொண்டே தான் இருந்தது. இது குறித்து அதிமுக முக்கியத் தலைவர்களும்கூட விமர்சித்திருந்தனர்.
அமைச்சர் கேள்வி
இதற்கு அதிமுக தலைவர்களை மிகக் கடுமையாகச் சாடிய செந்தில் பாலாஜி, எடப்பாடியின் ஆட்சியில் மின் உற்பத்திக்காகத் துவங்கப்பட்ட திட்டங்கள் எவை? திட்டங்களின் மதிப்பீட்டுத் தொகை எவ்வளவு? அதற்காகச் செலவு செய்யப்படத் தொகை என்ன? அந்த திட்டங்களால் எத்தனை மெ.வா மின்சாரம் தயாரிக்கப்பட்டது? அந்த திட்டங்களின் இன்றைய நிலை என்ன? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தார்.
அணில்கள்
இது அதிமுக தலைவர்களின் விமர்சனங்களுக்கு வேண்டுமானாலும் சரியான பதிலடியாக இருக்கலாம். ஆனால், மின்சார பிரச்சினையை இது முடிவுக்குக் கொண்டு வரவில்லை. மேலும், மின்வெட்டு குறித்த செய்தியாளர் சந்திப்பில் அணில்களால் தான் மின்வெட்டு ஏற்படுகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூற, அது உடனடியாக வைரலானது. அணில்களால் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்படுவது உண்மைதான் என்றாலும் அதைச் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறியது விவாதமானது.
தலைநகரில் மின்வெட்டு
இப்படி பல்வேறு சம்பவங்கள் நடந்திருந்தாலும், மின்வெட்டு பிரச்சினைக்கு ஒரு முடிவு கண்டுபிடிக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில் தலைநகர் சென்னையிலும் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்படத் தொடங்கியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக மின்வெட்டு ஏற்படாமல் இருந்த நிலையில், இப்போது மீண்டும் மின்வெட்டு ஏற்படத் தொடங்கியுள்ளது சென்னைவாசிகளுக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.
மின்வெட்டு புகார்
இந்நிலையில், மூத்த பத்திரிக்கையாளர் ஆர்கே ராதாகிருஷ்ணன் மின்வெட்டு தொடர்பாக வரிசையாகப் பல ட்வீட்களை செய்திருந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆர்ஏ புரத்தில் மின்வெட்டு ஏற்பட்டதில்லை என்றும் இப்போது திடீரென மின்வெட்டு ஏற்படத் தொடங்கியுள்ளதாகவும் அவர் ட்வீட் செய்திருந்தார். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையிலும் ட்வீட் செய்திருந்தார்.
சில மணி நேரத்தில் தீர்வு
அவர் புகார் அளித்த சில மணி நேரங்களிலேயே நள்ளிரவு 12 மணியளவில் ஆர்கே ராதாகிருஷ்ணனை தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி தொடர்பு கண்டு பேசியுள்ளார். மேலும், அடுத்த சில நிமிடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரடியாகப் பத்திரிக்கையாளர் ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு feeder trip-ஆல் மின்வெட்டு ஏற்பட்டதாகவும் இது உடனடியாக சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ட்வீட்
இது குறித்து பத்திரிக்கையாளர் ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டரில், "இது உண்மை. ராஜேஷ் லக்கானி எனக்கு தொலைப்பேசியில் பேசிய சில நிமிடங்களில், செந்தில் பாலாஜி என்னை அதிகாலை 12.21 மணிக்கு அழைத்தார். ஆர்.ஏ.புரம், Mogappair உள்ள மின் பிரச்சினை தவிர - மக்கள் என் கவனத்திற்குக் கொண்டுவந்த புகார்கள் குறித்து அவர்கள் இருவருக்கும் தெரிவித்தேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
மக்கள் கோரிக்கை
தமிழ்நாட்டில் மின்வெட்டு பிரச்சினை மிகப் பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. மின்வெட்டு சிக்கல் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை என்றாலும் அமைச்சரே மின்வெட்டு தொடர்பான புகார்களை நேரடியாகக் கண்காணித்துச் சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொண்டு விளக்கமளித்துள்ளதைப் பலரும் பாராட்டி வருகின்றனர். அதேநேரம் இத்துடன் நிற்காமல் தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க அமைச்சர் விரைவில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.