காமெடி பண்ணாதீங்க.. விஜய் அண்ணா கூட போட்டி போட நான் என்ன லூசா? உதயநிதி சொன்னதை பாருங்க! பரபர பின்னணி
சென்னை: விஜய் இப்போது அரசியலுக்கு வந்துள்ள நிலையில், திடீரென சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு உதயநிதி பதிவிட்ட போஸ்ட்டை இப்போது விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள். இதற்கான காரணம் என்ன.. பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நீண்ட காலமாகவே விஜய் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு இருந்து கொண்டே இருந்தது. அவரது செயல்பாடுகளும் கூட அதை நோக்கியே இருந்தது. இந்தச் சூழலில் தான் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்குவதாகச் சமீபத்தில் அறிவித்தார்.

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் கட்சியை ஆரம்பித்துள்ளார். இதற்காக டெல்லி சென்ற விஜய் மக்கள் மன்ற நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், கட்சியைத் தொடங்க தேவையான ஆவணங்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தார்.
விஜய் அரசியல்: வரும் லோக்சபா தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடாது என்று விஜய் அறிவித்துள்ளார். அதேநேரம் 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார். இது தமிழக அரசியலில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. விஜய் அரசியலுக்கு வந்துள்ளதற்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக விஜய் அரசியல் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டிருந்தனர். அதற்கு உதயநிதி, "இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியை ஆரம்பிக்கலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. விஜய் இப்போது அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார். அவருக்கு நாம் அனைவரும் இணைந்து வாழ்த்துவோம், அவரது மக்கள் பணி சிறக்கட்டும்" என்று கூறியிருந்தார்.
உதயநிதி: வரும் காலத்தில் தமிழக அரசியல் உதயநிதி vs விஜய் என்று செல்லும் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இதற்கிடையே உதயநிதி ஸ்டாலின் கடந்த 2011ஆம் ஆண்டு விஜய் குறித்துப் பதிவிட்ட ஒரு ட்வீட் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த உதயநிதி, "காமெடி பண்ணாதீங்க ப்ரோ.. விஜய் அண்ணா கூட போட்டிப் போட நான் என்ன லூசா" என்று அவரது போஸ்ட் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

விஜய் இப்போது அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள் இந்த ட்வீட்டை டிரெண்ட் செய்து வருகிறார்கள். அப்போதோ விஜய் உடன் போட்டிப் போடுவது வேண்டாம் என்ற முடிவில் தான் உதயநிதி இருந்துள்ளார் என்றும் கூறி வருகின்றனர். இதற்கிடையே உதயநிதி எதற்காக இப்படிச் சொன்னார் என்பது குறித்த தகவல்கள் இப்போது தெரிய வந்துள்ளது.
பின்னணி: உதயநிதி இந்த ட்வீட்டை கடந்த 2011 அக். மாதம் போட்டிருந்தார். அரசியலை விடுங்க.. இது அவர் சினிமாவிலும் அறிமுகமாவதற்கு முன்பு பதிவிட்ட போஸ்ட் ஆகும். அவரது முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் அவர் அப்போது நடித்துக் கொண்டிருந்தார். பிரேம் என்பவர் உதயநிதியிடம், "உங்க நண்பர் (விஜய்) உடன் ஓகே ஓகே படத்தை ரிலீஸ் பண்ணுங்க ப்ரோ.. செமயா இருக்கும். அப்போ தான் தமிழகம் முழுக்க அது பேசுபொருள் ஆகும்.. என்ன ஓகேவா" என்று கேட்டிருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் போது தான் உதயநிதி, "காமெடி பண்ணாதீங்க ப்ரோ.. விஜய் அண்ணா கூட போட்டிப் போட நான் என்ன லூசா" என்று கூறியிருந்தார். அதைத்தான் இப்போது விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications