வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு... சுற்றுப்பயணத்தை தொடங்கும் திமுக எம்.எல்.ஏ.க்கள்..!
சென்னை: கொரோனா கால கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ளனர் திமுக எம்.எல்.ஏ.க்கள்.
இதுவரை அதிகாரப்பூர்வமாக நன்றி தெரிவிக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாவிட்டாலும், தொகுதிக்குள் செல்லும் போதெல்லாம் மக்களை சந்தித்து அமைச்சர்களும், திமுக எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவித்து வந்தனர்.
ஆனால் இனி வரும் நாட்களில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பயணம் என்ற பெயரிலேயே தொகுதி முழுவதும் அவர்கள் உலா வரவுள்ளனர்.

சட்டமன்றத் தேர்தல்
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக பெருவாரியான இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற காலக்கட்டத்தில் தமிழகத்தில் கொரோனா பரவல் மிகுதியாக இருந்ததால் பதவியேற்பு வைபவம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் எளிமையாக நடத்தப்பட்டன. தேர்தல் முடிவு வெளியாகிய ஓரிரு வாரங்களில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவித்து வெற்றிபெற்றவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தமிழகத்தில் வழக்கமான ஒன்று.

சுற்றுப்பயணம்
இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருந்ததாலும், அரசின் ஊரடங்கு கால கட்டுப்பாடுகளாலும் சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் நன்றி தெரிவிக்கும் சுற்றுப்பயணத்தை ஒத்தி வைத்து வந்தனர். தற்போது கொரோனா பரவல் ஓரளவு குறைந்திருப்பதாலும், ஊரடங்கு கால கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாலும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் சுற்றுப்பயணம் தொடங்கவிருக்கின்றனர்.

அமைச்சர்கள் சிலர்
இதனிடையே அமைச்சர்கள் மட்டும் தொகுதிக்குள் ஆய்வுக்கு செல்லும் போது, உரிய கிராம மக்களை சந்தித்து வாக்களித்து வெற்றிபெற வைத்தமைக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். உதாரணத்துக்கு முதுகுளத்தூர் தொகுதி முழுவதும் ஒரு ரவுண்டு அடித்துவிட்ட அமைச்சர் ராஜகண்ணப்பன், வாக்காளர்களுக்கு நன்றியும் தெரிவித்துவிட்டார். கிராமப்புறங்களை உள்ளடக்கிய தொகுதியில் வெற்றிபெற்ற அமைச்சர்கள் பெரும்பாலானோர் ஏற்கனவே நன்றி அறிவிப்பு பணிகளை தொடங்கிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோரிக்கைகள்
இந்த சுற்றுப்பயணத்தின் போது பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் தொடர்பாக எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பது முதலமைச்சர் ஸ்டாலினின் முக்கிய அறிவுறுத்தலாகும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக நன்றி தெரிவிக்கும் சுற்றுப்பயணம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications