சென்னை குலுங்க வேண்டும்... கூட்டம் குவிய வேண்டும்... பிரம்மாண்ட பேரணிக்கு திமுக திட்டம்
சென்னை: குடியுரிமை சட்டத்தை கண்டித்து திமுக உள்ளிட்ட பல கட்சிகள் ஒன்றிணைந்து சென்னையில் நாளை பிரம்மாண்ட பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை பேரணியில் பங்கேற்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் தனித்தனியாக செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு கட்சித் தலைவரும் தன்னுடைய கட்சியில் இருந்து நிர்வாகிகள், தொண்டர்களை பெருமளவில் பேரணியில் பங்கேற்க வைத்து டெல்லியின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
'குடி'மக்களுக்கு ஒர் அறிவிப்பு.. 25ஆம் தேதி மாலை முதல் 27ஆம் தேதி வரை டாஸ்மாக் லீவு!
திமுக அழைப்பு
குடியுரிமை திருத்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கும் திமுக இது தொடர்பாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கடந்த வாரம் ஆலோசித்தது. அதில் நாளை சென்னையில் பேரணி நடத்தி மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி பேரணிக்கு தலைமை தாங்கும் திமுக அதனை பிரம்மாண்ட முறையில் நடத்திக்காட்டி டெல்லியை மிரளவைக்க வேண்டும் என நினைக்கிறது.
ஸ்டாலின் அழைப்பு
குடியுரிமை சட்டத்துக்கு எதிரான பேரணியில் பங்கேற்குமாறு தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட 98 அமைப்புகளுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை ஒருங்கிணைத்து அதற்கும் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
அறிவுறுத்தல்
ஊரக உள்ளாட்சி பகுதி நிர்வாகிகளை தவிர்த்து நகராட்சி, மாநகராட்சி பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமுக்கிய நிர்வாகிகள் பலர் கணிசமான எண்ணிக்கையில் ஆட்களை திரட்டி வர உள்ளனர்.
தனியாக ஏற்பாடு
இதேபோல், காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐ.யூ.எம்.எல்., ம.ம.க, ம.நே.ஜ.க, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் தங்கள் கட்சி சார்பில் அதிகளவில் தொண்டர்களை பேரணியில் பங்கேற்க வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.