செயலில் சிட்டு.. சைதை கிட்டு.. இன்று 9ம் ஆண்டு நினைவு நாள்.. திமுகவினர் அஞ்சலி.. மரியாதை..!
சைதை கிட்டுவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது
சென்னை: "செயலில் சிட்டு- சைதை கிட்டு" என முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்ட சைதை கா.கிட்டுவின் நினைவு நாள் இன்று திமுக சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
சைதை கிட்டு தேவகோட்டையை சேர்ந்தவர்.. சென்னை சைதாப் பேட்டை தொகுதியின் நிரந்தர திமுக வேட்பாளர்.. தேர்தலில் எப்போது தோல்வியுற்றாலும்கூட அடுத்த தேர்தலிலும் அவருக்கே சைதை தொகுதி வழங்கப்படுவது வழக்கம். காரணம், மறைந்த கருணாநிதியின் செல்லபிள்ளை என்று சொல்லப்படுபவர்.
தென் சென்னை மாவட்ட திமுக செயலாளராக பலஆண்டுகாலம் பொறுப்பு வகித்தவர். இவர் 4 முறை சைதாப்பேட்டை தொகுதியிலிருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். தென் சென்னையில் பல்வேறு போராட்டங்களை நடத்தியவரும்கூட.
கருணாநிதி படத்திறப்பு.. இபிஎஸ்க்கு நானே போன் போட்டு அழைப்பு விடுத்தேன்.. வருத்தப்பட்ட துரைமுருகன்
கருணாநிதி
ஒருமுறை கருணாநிதி பேசும்போது, "எத்தனையோ பேர் இந்த இயக்கத்தில் பணியாற்றியிருக்கலாம். அவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கக்கூடிய தகுதி, சைதை கிட்டு போன்ற சிலருக்குத்தான் உண்டு. நெருக்கடி காலத்தில் இந்த இயக்கத்திற்கு ஏற்பட்ட சோதனைக்காலத்தில் உறுதுணையாக இருந்து இந்த இயக்கத்தை காத்த பெருமை கிட்டுவுக்கு உண்டு... இந்த இயக்கத்தில் அப்படிப்பட்ட மாவீரர்கள் இன்னும் தோன்றவேண் டும். இயக்கத்தால் தனக்கு என்ன லாபம் என்று பெருமூச்சு விடுகிறவன் அந்த இயக்கத்திற்கு புற்றுநோய்... அப்படிப்பட்ட ரத்த நாளமாக கிட்டு இருந்தார்" என்று புகழாரம் சூட்டினார்.
பெயர்
சைதை கிட்டுவும், கருணாநிதி மீது பெரும் மதிப்பு வைத்திந்தவர்.. அவரிடத்தில் கொண்ட அன்பு காரணமாகத்தான் தன்னுடைய மகனுக்கு கருணா என்று சூட்டினார்.. அதாவது நிதியையும் சேர்த்து சூட்டியிருந்தால் தலைவர் பெயரை சொல்லி அழைக்க வேண்டுமே என்று கருதியே கிட்டு அவ்வாறு பெயர் சூட்டினாராம்.
சுறுசுறுப்பு
கிட்டு இருந்தவரை, திமுகவின் இளைஞர் அணி திமுக சுறுசுறுப்பாகவே காணப்படும்.. குறிப்பாக சைதாப்பேட்டை பகுதி திமுகவினர் உற்சாகத்துடன் வேலை பார்ப்பார்கள்.. அதேபோல சைதையில் வெற்றி என்பதும் தானாகவே கிடைத்து விடும்.. அதற்கு காரணம் கிட்டு என்ற நபர் மட்டுமே.. உடல்நலக்குறைவால் கிட்டு இறந்தாலும், அவரது நினைவு நாளில் திமுகவினர் வருடாவருடம் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நினைவுநாள்
இன்று கிட்டுவின் நினைவு நாள் என்பதால், திமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.. இதுகுறித்து திமுகவின் ட்விட்டர் பக்கத்தில், "தென்சென்னை முன்னாள் மாவட்ட கழக செயலாளர் அமரர் திரு.சைதை கா.கிட்டு அவர்களின் 9வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை தெ மா கழக அலுவலகம் மற்றும் சைதை மே பகுதி கழக அலுவலகங்களில் நடைபெற்ற நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியம்" என்று பதிவிடப்பட்டுள்ளது.