திருச்சி சூர்யாவை அண்ணாமலை நீக்குவாரா? டெய்சிக்காக குஷ்பு குரல் கொடுப்பாரா? ராஜீவ்காந்தி கேள்வி!
சென்னை: பாஜக பெண் நிர்வாகி டெய்சியிடம் அநாகரீகமாக பேசிய திருச்சி சூர்யாவை, அண்ணாமலை கட்சியிலிருந்து நீக்குவாரா என திமுகவின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணான டெய்சிக்காக குஷ்பு குரல் கொடுப்பாரா எனவும் ராஜீவ்காந்தி வினவியுள்ளார்.
டாக்டர் டெய்சி சரணுக்கும், திருச்சி சூர்யாவுக்கும் இடையே நடந்த அலைபேசி மோதல் பாஜக முக்கியத் தலைவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக ரித்திகா வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு...வாழ்த்தும் ரசிகர்கள்
திருச்சி சூர்யா
பாஜக பெண் நிர்வாகியான டாக்டர் டெய்சி சரணை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திருச்சி சூர்யா அர்ச்சனை செய்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஜேபி நட்டாவிடம் போனாலும் சரி, அமித்ஷாவிடம் போனாலும் சரி யாரிடம் போய் முறையிட்டாலும் தனக்கு கவலையில்லை என்கிற தொணியில் திருச்சி சூர்யா பேசுவது போலவும் நடமாடவே முடியாது என்கிற அளவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் அந்த ஆடியோ உரையாடல் அமைந்துள்ளது.
ஆடியோ விவகாரம்
இந்த ஆடியோ விவகாரமானது பாஜக முக்கியத் தலைவர்கள் பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது. இதனிடையே இது தொடர்பாக பதிவு வெளியிட்டுள்ள திமுக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான ராஜீவ் காந்தி, பெண்களை தவறாக பேசினால் கையை வெட்டுவேன் என்பது தானே உங்கள் கொள்கை முழக்கம் என அண்ணாமலையை சுட்டிக்காட்டிய அவர் பெண்களை தவறாக பேசிய திருச்சி சூர்யா என்ற குற்றவாளியின் கையை வெட்ட வேண்டாம், கட்சியில் இருந்தாவது நீக்குவீங்களா அண்ணாமலை? என வினவியுள்ளார்.
குஷ்புவுக்கு ராஜீவ் கேள்வி
இதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக குஷ்பு அவர்கள் குரல் கொடுப்பார்களா? என்ற கேள்வியையும் ராஜீவ் காந்தி முன் வைத்துள்ளார். அண்மையில் தாம் உள்ளிட்ட பாஜக பெண் நிர்வாகிகளை திமுக பேச்சாளர் ஆபாசமாக பேசியதாக கூறி கடும் கண்டனம் தெரிவித்திருந்த குஷ்பு இதனை தேசிய மகளிர் ஆணையம் வரை புகாராகவும் அளித்திருந்தார். இந்நிலையில் பாஜக பெண் நிர்வாகியிடம் பாஜகவை சேர்ந்த திருச்சி சூர்யா அநாகரீகமாக பேசியதற்கு குஷ்பு என்ன மாதிரியான கருத்து தெரிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மறைக்க முயற்சி
பாஜக பெண் நிர்வாகியான டாக்டர் டெய்சியிடம் திருச்சி சூர்யா அநாகரீகமாக நடந்து கொண்ட செயலை ஊடகங்களில் பேசு பொருளாக இல்லாமல் இருக்கும் வகையில் அதனை திசை திருப்பும் நோக்கில் காய்த்ரி ரகுராமை அண்ணாமலை பாஜகவிலிருந்து நீக்கியுள்ளதாகவும் ராஜீவ்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.