"இந்த முறை கோவை & சேலத்தில் மாபெரும் வெற்றி உறுதி.." கே.என்.நேரு நம்பிக்கை.. காரணம் இது தானாம்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், திமுக முதன்மை செயலாளரும் மூத்த அமைச்சருமான கே என் நேரு தனது வாக்கைப் பதிவு செய்தார்.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி மிகப் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு இன்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மார்ச் 4இல் மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்யும் மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் அனைவரும் மிகவும் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். சில இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், அதையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். நடிகர் விஜய், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டவர்கள் காலையிலேயே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

ஈபிஎஸ் மீது அட்டாக்
திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் திமுகவின் முதன்மை செயலாளரும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தன்னுடைய வாக்கைப் பதிவு செய்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "முன்னாள் முதல்வர் தொடர்ந்து தேர்தல் குறித்துக் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். குறை மட்டுமே கூறி வந்ததாதல் தான் அவர் இப்போது முன்னாள் முதல்வராக உள்ளார். இல்லை என்றால் அவர் தற்போது முதல்வராக இருந்திருப்பார்" என்றார்.

கோவை
தொடர்ந்து கோவை மற்றும் கரூர் மாவட்டங்களில் எழுந்துள்ள புகார்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "அது குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால், கோவையில் இந்த முறை நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக கைப்பற்றும். நாங்கள் தற்போது ஆளும் கட்சியாக இருப்பதால் எங்களுடைய பணியை மிகச் சிறப்பாகச் செய்து வருகிறோம். கடந்த முறை திமுக தலைவர் ஸ்டாலினிடம் புகார் கொடுக்கையில் நான் முதல்வராக இருப்பதால் அந்த மனு என்னிடம் தானே வரவேண்டும் என்று கூறியவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அவரே இப்போது இது சரியில்லை அது சரியில்லை என்று குற்றம்சாட்டி வருகிறார்.

திருச்சியில் திமுக தான்
தற்போது நாங்கள் ஆளும் கட்சியாக இருப்பதால் அனைத்து வேலைகளையும் வேகமாகச் செய்வோம். எல்லாக் குறைகளையும் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்தபோதே 16இடங்களில் திமுக வெற்றி பெற்றது. இந்த முறை மாநகராட்சியைக் கைப்பற்றுவோம்.

சேலம்
எங்களை நம்பிய தமிழக முதல்வர் 1,300 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளைத் திருச்சிக்கு அளித்திருக்கிறார். இதுபோல தமிழக அரசு செய்துள்ள சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்துத் தான் இந்த முறை நாங்கள் வாக்கு சேகரித்தோம். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி திருச்சியில் மட்டுமல்ல. சேலத்திலும் கூட வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications