உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் கச்சேரி இனிதான் ஆரம்பமாகும்... வெயிட் அன் சீ - ஜெயக்குமார்
இப்போது தேர்தல் அமைதியாக நடைபெறுகிறது. மதியத்திற்கு மேல்தான் திமுகவினரின் கச்சேரி ஆரம்பமாகும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: திமுகவைப் பொறுத்தவரை 2 மணிக்கு மேல் கச்சேரியை ஆரம்பிக்கப்போவதாக கூறுகின்றனர் என்று மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 2 மணிக்கு மேல் அந்த கச்சேரியை அனைவரும் காண்பீர்கள் என நினைக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சித்தலைவர்கள், நடிகர்கள் பலரும் வந்து வாக்களித்து வருகின்றனர்.
அமைதியான முறையில் எந்த வித அசம்பாவித சம்பவங்கள் ஏதும் இன்றி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. சென்னை, தாம்பரம் மாநகரங்களில் மிகவும் மந்தமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ஜெயக்குமார் பேட்டி
சென்னையில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "குண்டர்கள், ரவுடிகள் முழுமையான அளவிற்கு ஒவ்வொரு தொகுதியிலும் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில், மாநில தேர்தல் ஆணையத்தில் தானும் கட்சியின் சட்ட ஆலோசகர் குழு உறுப்பினர் பாபு முருகவேல் மற்றும் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் நேற்று மனு அளித்ததாக கூறினார்.

அமைதியான வாக்குப்பதிவு
தேர்தல் ஆணையமும் உறுதியளித்தது, அதன்படி தற்போது வரை, தேர்தல் அமைதியாக நடக்கின்ற சூழ்நிலை உள்ளது. மாலை வாக்குப்பதிவு முடிவடையும் நேரம் வரை, இதே நிலை நீடிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றோம். மாலை வரை அமைதியாக தேர்தல் நடைபெற்றால் நல்லது.

பிரச்சினை எதுவும் இல்லை
காலை 10.30 மணி வரை எந்த பிரச்சினையும் இல்லை. வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் செய்ய வேண்டும் என்றார். தற்போதுகூட கோவையில் பணப்பட்டுவாடா நடந்து கொண்டிருக்கிறது. அண்டா, குண்டா, ஹாட் பேக்ஸ் விநியோகம் செய்யப்படுகிறது.

பரிசுப்பொருள் விநியோகம்
ஒரு வீட்டில் 5 பேர் இருந்தால், அனைவருக்கும் ஹாட் பேக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.500, ரூ.1,000, துறைமுகம் தொகுதியெல்லாம் பணம் அப்படி விளையாடுகிறது. சென்னையில் பல இடங்களில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அவற்றையெல்லாம் காவல்துறை கண்டுகொள்ளவே இல்லை என்று குற்றம் சாட்டினார்.

கச்சேரி ஆரம்பிக்கும்
எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, திமுகவைப் பொறுத்தவரை இனிமேல்தான் கச்சேரியை ஆரம்பிக்கப்போவதாக கூறுகின்றனர். அதனால் 2 மணிக்கு மேல் அந்த கச்சேரியை அனைவரும் காண்பீர்கள் என நினைக்கிறேன். கச்சேரியை ஆரம்பிப்பதற்கான முஸ்தீபுகள், முன்னேற்பாடுகள் எல்லாம் செய்துகொண்டிரு்பபாதக தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது.

மக்கள் தயாராகிவிட்டனர்
பணம், பொருள் என எல்லாம் கொடுத்தால் கூட இந்த ஆட்சிக்கு புத்தி வரவேண்டும், இனியாவது இந்த ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும் என்பதற்காக மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர் என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கடந்த பத்தாண்டுகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் மிகப்பெரிய அளவில் வன்முறை நிகழ்ந்தது அதை மனதில் வைத்து ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications