''மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை தேடாதீர்கள்.. அது 6-ம் தேதி வரை என் கண்ட்ரோலில்தான்''.. உதயநிதி கலகல!
சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை தேடாதீர்கள். அது 6-ம் தேதி வரை என் கன்ட்ரோலில்தான் இருக்கும் என்று பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
வருமான வரி சோதனைக்கு பயப்படுவதற்கு நாங்கள் எடப்பாடி பழனிசாமியோ, பன்னீர்செல்வமோ இல்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
இரட்டை இலைக்கு விழுகின்ற ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கும், பா.ஜ.க.வுக்கும் விழுகின்ற ஓட்டு என்றும் அவர் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
தமிழகத்தில் நாளை மறுநாள் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அம்பத்தூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஜோசப் சாமுவேலை ஆதரித்து தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
அமித்ஷாவிடம் கேள்வி கேட்டேன்
தமிழகத்தில் அ.தி.மு.க 10 ஆண்டுகளாக ஆட்சி செய்கிறது.. பா.ஜ.க 7 வருடங்களாக மத்தியில் ஆட்சியில் உள்ளது. எடப்பாடி பழனிசாமியும், பிரதமர் மோடியும் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு என்ன செய்தார்கள்? என்னுடைய சொத்து முழுக்க அமித்ஷா மகனின் பெயரில் எழுதி வைத்து விடுகிறேன். அவர் மகன் பெயரில் இருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் என் பெயரில் எழுதி வைக்க முடியுமா? எனக் கேட்டேன்.
பயப்பட மாட்டோம்
இதற்கு பதில் சொல்ல முடியாமல் என் தங்கையின் வீட்டில் வருமான வரிதுறையினர் சோதனை நடத்தினர். இறுதியில் அவர்கள் எடுத்துச் சென்றது ஒரு லட்ச ரூபாய் பணமும், தங்கை மகனுடைய ஜட்டியும் தான். வருமான வரி சோதனைக்கு பயப்படுவதற்கு நாங்கள் எடப்பாடி பழனிசாமியோ, பன்னீர்செல்வமோ இல்லை. எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக ஜோசப் சாமுவேல், மருத்துவமனையிலேயே படுத்துக்கொண்டே வெல்ல உள்ளார். அவர் விரைவில் குணமடைந்து உங்களுக்கு நன்றி சொல்ல வருவார்.
மோடிக்கு விழும் ஓட்டு
இரட்டை இலைக்கு விழுகின்ற ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கும், பா.ஜ.க.வுக்கும் விழுகின்ற ஓட்டு. எனவே மறந்தும் கூட மக்கள் விரோத கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள். மதுரையில் எம்ய்ஸ் மருத்துவமனை கட்டப்படும் எனக்கூறி, பிரதமர் மோடி மூன்று வருடத்திற்கு முன்பு செங்கல் நட்டுவைத்து சென்றார். நான் அந்த செங்கலை எடுத்து வந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன்.
எய்ம்ஸ் மருத்துவமனையை தேடாதீர்கள்
கடந்த 10 நாட்களாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை காணவில்லை என தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக சொல்கிறேன். 6-ம் தேதி வரை எய்ம்ஸ் மருத்துவமனை எனது கண்ட்ரோலில் தான் இருக்கும். 7 ஆம் தேதி மருத்துவமனையை கொடுத்து விடுகிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.