நீடிக்கும் ‘சஸ்பென்ஸ்’.. என்ன நடக்கப்போகுது? சட்டசபைக்கு போவாரா ஓபிஎஸ் ? - திட்டம் என்ன?
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக சபாநாயகர் யாரை அங்கீகரிக்கப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சட்டமன்றத்தில் இருக்கைகள் மாற்றம் இருக்குமா?, எதிர்க்கட்சி துணை தலைவராக யார் அங்கீகரிக்கப் படுவார் என்பதெல்லாம் இன்னும் சஸ்பென்ஸாகவே இருப்பதால், ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவைக்கு செல்வாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் ஓபிஎஸ் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது அனைவராலும் கவனிக்கப்பட்டு வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நிச்சயம் சட்டப்பேரவைக்குச் செல்வார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
அக்.17ல் சட்டப்பேரவை கூடுகிறது.. துணை நிதிநிலை அறிக்கை தாக்கல்.. அப்பாவு அறிவிப்பு!
சட்டமன்ற கூட்டத்தொடர்
வரும் அக்டோபர் 17-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் கூட்டப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் துணை நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் குழப்பம் குறித்துப் பேசிய அப்பாவு, அதிமுகவினர் சட்டப்பேரவை மரபுப்படியே அமரவைக்கப்படுவார்கள் என்றும், இரு தரப்பும் மகிழ்ச்சி அடையும் வகையில் நடவடிக்கை இருக்கும் என்றும் சபாநாகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இந்த கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடத்தி அதில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் யார்?
அதிமுகவில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, ஆர்.பி.உதயகுமார் அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதால் அவரை அதிகாரப்பூர்வமாக நியமிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி, சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினார். அதேநேரம், எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்றக்கூடாது என ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் கடிதம் அளித்திருந்தார். இந்த இரண்டு பேரின் கடிதங்களையும் பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ளார் அப்பாவு.
சீட்டை மாற்றுங்க
சட்டமன்றத்தில் இருக்கைகள் ஒதுக்குவது தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி சார்பில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி மூலம் சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் அளிக்கப்பட்டது. ஆளுங்கட்சியினர் ஒருபக்கம், எதிர்க்கட்சியினர் ஒருபக்கம், மற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் அடுத்தடுத்து என சட்டமன்றத்தில் இருக்கை ஒதுக்கப்படுவது வழக்கம். ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் அருகருகே அமர்ந்திருப்பார்கள். இப்போது, அதிமுகவில் மோதல் எழுந்திருப்பதால், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய எம்.எல்.ஏக்களை ஈபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களோடு அமர வைக்காமல், வேறு பக்கம் இருக்கை ஒதுக்குமாறும், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்பி உதயகுமார், துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு முன்புறம் இருக்கை ஒதுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
என்ன முடிவு?
இந்நிலையில், அதிமுக விவகாரத்தில் சபாநாயகர் என்ன முடிவை எடுத்திருக்கிறார்? அதிமுகவில் யாருடைய கோரிக்கையை ஏற்றிருக்கிறார்? ஓ.பன்னீர்செல்வம் டீமுக்கு எப்படி சீட் ஒடுக்கப்பட இருக்கிறது? என்பதெல்லாம் பெரும் எதிர்பார்ப்பாக எழுந்திருக்கிறது. ஆனால், இந்த கேள்விகளுக்கு பிடி கொடுக்காமல் பேசியிருக்கும் சபாநாயகர் அப்பாவு, எல்லாமும் சரியாகவே நடக்கும். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் செல்வாரா?
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் யார் என்பது பற்றியும் ஓ.பன்னீர்செல்வம் இருக்கை தொடர்பாகவும் இன்னும் தெளிவுபடுத்தப்படாத நிலையில் அவர் வரும் 17ஆம் தேதி சட்டமன்றம் செல்வாரா அல்லது தவிர்ப்பாரா எனும் கேள்வி எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் ஓபிஎஸ்ஸின் முடிவு குழப்பமாகவே இருந்து வந்தது. ஓபிஎஸ், ஈபிஎஸ் சீட் அருகருகே இடம்பெற்றால் அது சங்கடத்தைத் தரும் என ஓபிஎஸ் தரப்பில் பேசப்பட்டுள்ளது. எனினும், ஓபிஎஸ், வரும் 17ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத்திற்கு நிச்சயம் செல்வார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
ஜனநாயக கடமை
ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்திற்குள் செல்வார், ஜனநாயக கடமையை ஆற்றுவார். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்றி 63 எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள் என்றால், அவர்களை ஜெயிக்க வைக்க A ஃபார்ம், B ஃபார்மில் கையெழுத்து போட்டவர் ஓபிஎஸ். அவர் போட்ட கையெழுத்து செல்லாது என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.