ஹிந்தி வேணாம்னீங்க.. ஹிந்தி படத்தை ரிலீஸ் செய்வது ஏன்? வந்து விழுந்த கேள்வி.. உதயநிதி ஸ்டாலின் பதில்
இந்தி மொழி தேவையா என்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம் தந்துள்ளார்
சென்னை: இந்தி மொழியைக் கற்றுக்கொள்ளக்கூடாது என எப்போதுமே திமுக சொன்னது கிடையாது... தேவைப்பட்டால் கற்றுகொள்ளலாம்... ஆனால், நீங்கள் கற்றுக்கொண்டது தான் ஆக வேண்டும் என்று யாராவது திணித்தால் அதை எதிர்க்க வேண்டும் என்பது தான் திமுகவின் கொள்கை என்று உதயநிதி ஸ்டாலின் விளக்கம் தந்துள்ளார்.. இதையடுத்து, இது ஒரு விவாதமாகவே சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளது.
ஆகஸ்ட் 11-ம் தேதி ஆமீர்கான் நடித்துள்ள 'லால் சிங் சத்தா' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் அதற்கான உரிமையை பெற்று வெளியீடுகிறது..
இதையடுத்து, இந்த தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.. இதில், ஆமீர்கான், நாகா சைதன்யா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டுக்கே பெருமை.. இனி செஸ் எங்கேயோ போகும்.. விஸ்வநாதன் ஆனந்த்தை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!
ஜாம்பவான்கள்
பான் இந்தியா குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று அமீர்கானிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ''இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட ஒரு நாடு... ஒவ்வொரு மொழிகளிலும் நமக்கு ஒரு ஜாம்பவான்கள் இருக்கிறார்.. வெவ்வேறு மொழிகளில் நல்ல படங்கள் வருவது மிகவும் சிறப்பானது. நாட்டின் பல்வேறு மொழிகளில், பிராந்தியங்களிலிருந்து வெளியாகும் படங்களை நான் விரும்பி பார்க்கிறேன்... அது ஆரோக்கியமானது. கேரக்டரை உள்வாங்கி கொள்வது சவாலாக இருந்தது. வெவ்வேறு காலக்கட்டத்தில், வெவ்வேறு வயதுடையவராக நடிப்பதும் சவாலாக இருந்தது'' என்றார்.
இந்தி படம்
அப்போது செய்தியாளர் ஒருவர், "இந்தி எதிர்ப்பை பதிவு செய்யும் தமிழகத்தில், இந்தி படத்தை வெளியீடுவதால் வரும் எதிர்கருத்துகளை எப்படி எதிர்கொள்வீர்கள்?' என்று உதயநிதியிடம் கேள்வி எழுப்பினார்.. அதற்கு உதயநிதி ஸ்டாலின் ''எப்போதும் 'இந்தி தெரியாது போடா' என்பது இந்தி திணிப்புக்கு எதிரானது தான்.. மொழியைக் கற்றுக்கொள்ளக்கூடாது என எப்போதும் நாம் சொன்னது கிடையாது... உங்களுக்குத் தேவைப்பட்டால் நீங்கள் கற்றுகொள்ளலாம். ஆனால், நீங்கள் கற்றுக்கொண்டது தான் ஆக வேண்டும் என்று யாராவது திணித்தால் அதை எதிர்க்க வேண்டும் என்பது தான் திமுகவின் கொள்கை.
அமீர்கான்
இது ரெட் ஜெயண்டின் முதல் இந்தி படம்.. தெலுங்கு படத்தை வெளியிட்டிருக்கிறோம். மொழியைத் தாண்டி, எனக்கு அமீர்கானின் நடிப்பு மிகவும் பிடிக்கும். அவரின் எல்லா படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். இந்த படத்தில் இந்திய வரலாறு நிறைய இருக்கிறது. அது தொடர்பாக நானும், ஆமீர்கானும் நிறைய பேசினோம். இது ஒரு ஃபேன் பாய் தருணமாக கூட நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்'' என்றார்.
உதயநிதி பதில்
தமிழ்நாட்டில் ஆளும் திமுக, மாநிலத்தில் இந்தி எதிர்ப்பை வலியுறுத்தி வரும் நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தி படமான அமீர்கான் நடித்துள்ள லால்சிங் சத்தா படத்தின் தமிழ் பதிப்பை வெளியிடுவது சர்ச்சையை உருவாக்கி வருகிறது.. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை நுழைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. ஆனால் எதிர்கட்சியாக இருந்த போதும்சரி, தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் சரி, திமுக அதை கடுமையாக எதிர்த்து வருகிறது.
வழக்காடு மொழி
தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் தான் பயிற்று மொழி என திமுக உறுதியாக இருந்து வருகிறது. மேலும், இந்தி திணிப்பை எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழக அரசு கொள்கையாக உள்ளது. அதேபோல, நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது... ஆனால், "மொழி அரசியல் செய்து வந்த திமுக, மொழியோடு சாதியை இணைத்து அரசியல் செய்ய முனைவது பிரிவினை கருத்துகளை விதைப்பதற்காத்தான் என்று பாஜக பலமுறை விமர்சித்து வருகிறது.
இந்தி மொழி
அதுமட்டுமல்ல, சில மாதங்களுக்கு முன்பு, டிகேஎஸ் இளங்கோவன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் எல்லாம் இந்தி பேசாத மாநிலங்கள்.. ஆனால், இந்தி பேசும் மாநிலங்களான, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஆகியவை வளர்ச்சி அடையாமல் இருக்கிறது.. அப்படியென்றால், எதுக்காக நாம் இந்தி படிக்க வேண்டும்? நாடு முன்னேற வேண்டுமென்றால் மாநில மொழிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதேபோல, இந்தி படித்தவர்கள் எல்லாம் தமிழகத்தில் பானிபூரிதான் விற்கிறார்கள் என்று ஒருமுறை அமைச்சர் பொன்முடியும் கூறியிருந்தார்.
இளங்கோவன்
இளங்கோவன், பொன்முடி இப்படி கூறியிருந்தது வழக்கம்போல் பாஜகவை எரிச்சலடைய வைத்தது என்றாலும், கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கும் இவர்களின் பேச்சு சங்கடத்தை தந்தது.. குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் இப்படி ஒரு தர்மசங்க சூழல் ஏற்பட்டுள்ளதாக சலசலத்தார்கள்.. எம்பி தேர்தல் வர உள்ள நிலையில், ஏற்கனவே பல வடமாநிலங்களை பாஜகவிடம் இழந்துவரும் நிலையில், திமுக இப்படி பேசினால் எப்படி? என்றும் நொந்துபோய் கேள்விகள் எழுந்தன.. ஆக, அன்றிலிருந்து இன்று வரை இந்தி மொழிக்கு எதிரான முன்னெடுப்புகளை திமுக எடுத்து வந்தாலும், மற்றொரு பக்கம் சர்ச்சைகளும், எதிர்ப்புகளும், கண்டனங்களும் அதிகரித்துதான் வருகின்றன.. அந்த லிஸ்ட்டில்தான், உதயநிதியின் இந்த இந்தி பட ரிலீஸும் சேர்ந்துள்ளது.