டெங்கு உயிர் கொல்லி அல்ல.. உஷாராக மட்டும் இருங்கள்.. பீதி அடையாதீர்!
Recommended Video
சென்னை: டெங்கு காய்ச்சல் என்பது உயிர்க் கொல்லி அல்ல. அது வெறும் வைரஸ்தான். எனவே மக்கள் பீதி அடைய வேண்டாம்.
தமிழகத்தில் தற்போது பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் என பல்வேறு வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகின்றன. இதில் முக்கியமாக டெங்கு காய்ச்சலால் இன்று சென்னை கொளத்தூரை சேர்ந்த இரட்டை குழந்தைகள் பலியாகிவிட்டனர்.
இதனால் சென்னையில் பரபரப்பு நிலவி வருகிறது. முதலில் டெங்கு காய்ச்சல் என்பது சாதாரண வைரஸ் காய்ச்சல் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முறையான தடுப்பு முறைகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் பெற்றாலே உயிரிழக்கும் அபாயத்தை தடுத்து விடலாம்.
[டெங்குவுக்கு இரட்டை குழந்தைகள் மரணம்.. அபாய கட்டத்தில் வந்ததால் காப்பாற்ற முடியாத சோகம்]
ஆலோசனைகள்
முதலில் இந்த டெங்கு வைரஸ் என்பது பகலில் கடிக்க கூடிய ஏடீஸ் என்ற கொசுக்கள் மூலம் ஏற்படுகிறது. இந்த கொசுக்கள் எப்படி பரவுகிறது, எந்த கட்டத்தில் மருத்துவமனையை நாடுவது என்பது குறித்த கேள்விகளுக்கு எழும்பூர் மருத்துவமனை இயக்குநர் அரசர் சீராளர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
வைரஸ் பரவுகிறது
அவர் கூறுகையில் இந்த வைரஸ்கள் யாருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையே முதலில் பாதிக்கும். நோயை எதிர்க்கக் கூடிய தன்மை நன்றாக இருந்தால் இதுபோன்ற வைரஸ்களை எதிர்க்கக் கூடிய வாய்ப்பு அதிகம். சில குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். டெங்கு வைரஸ் இருப்பவரை கடிக்கும் ஒரு கொசு அங்கிருந்து வைரஸை எடுத்துக் கொண்டு அது யாரையெல்லாம் கடிக்கிறதோ அவர்களுக்கெல்லாம் கொடுக்கும்.
விபரீதங்கள்
கொசு நிறைய பேரை கடித்திருக்கும். ஆனால் எல்லாருக்கும் டெங்கு வருவதில்லை. நோய் தடுப்பு சக்தி நன்றாக இருந்தால் அந்த சக்தி அந்த வைரஸை அழித்துவிடுகிறது. எந்த குழந்தைக்கு நோய் தடுப்பு சக்தி குறைவாக உள்ளதோ அந்த குழந்தைக்கு இது சில விபரீதங்களை ஏற்படுத்துகிறது.
95 சதவீதம்
மக்கள் கொசுவை ஒழிக்க முயற்சி செய்ய வேண்டும். இந்த கொசுக்கள் நல்ல நீரில் பெருகக் கூடியது. இது நம் வீட்டில் தோட்டத்தில் இருக்கும் நீரில் இருக்கலாம். மூடாமல் வைக்கப்பட்ட குடம், டிரம் தண்ணீரில் முட்டையிட்டு வளரலாம். ஏசி கருவியிலும் கூட வளரும். 95 சதவீதம் பேருக்கு காய்ச்சல் வந்தால் அது உடனே போய்விடும். சில பேருக்கு மட்டுமே விபரீதத்தை ஏற்படுத்துகிறது.
அபாய அறிகுறிகள்
எனவே 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். தொடர் தலைவலி, அலாதி உடல் சோர்வு, தொடர் வாந்தி, அதிக வயிற்றுவலி, வயிறு உப்புசம், கை, கால்கள் குளிர்ச்சியாக இருப்பது ஆகிய அபாய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்து விட வேண்டும். விபரீதங்களை தடுக்க முடியும். ஆரம்ப கட்டத்தில் அழைத்து வந்தால் உடனே காப்பாற்றி விடலாம். அபாய அறிகுறியுடன் வந்தால் மலை உச்சி மீதிருந்து விழுந்த கல்லை எப்படி தடுக்க முடியாதோ அது போல் அபாய அறிகுறிகளை தடுக்க முடியாது என்றார் அரசர் சீராளர்.