சிகரெட் பிடிச்சா இத்தனை நோய்களா? இப்போதும் ஒன்னும் கெட்டு போகலை! விட்டுடுங்க.. டாக்டர் பரூக் அட்வைஸ்
சென்னை: புகைப்பழக்கத்தால் கேன்சர், இதயநோய் உள்ளிட்ட நோய்கள் வரும் என்பதால் அந்த பழக்கத்தை இப்போதே விட்டுவிடுங்கள் என சிவகங்கை அரசு பொது மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கிளினிக்கில் நாற்பதுகளின் இறுதியில் இருக்கும் ஒரு பெண் சில ஆண்டுகளாக நீரிழிவால் பாதிக்கப்பட்டவர். இப்போது சோதித்து பார்த்ததில் 400ஐ தொட்டது சர்க்கரை. ஏன்மா? என்று விசாரித்ததில் அவரது கணவர் சமீபத்தில் தான் இறந்துள்ளார் என்பதை தெரிவித்தார்.
"எவ்வளவு நாளாச்சுமா ஐயா இறந்து?" "இன்னையோட 55 நாளாச்சு" "எப்படி ஆச்சு?" "சார்.. அவர் ஒரு சம்சாரி.. எங்களுக்குனு கொஞ்சம் நிலம் இருக்கு. அதுல விவசாயம் பண்ணுவோம் . அன்னைக்கும் அப்படி தான் வயல்ல சாமிகூம்பிட்டுட்டு கைப்பிடி வெதநெல்ல எடுத்து தூவிட்டு.. அவரோட மச்சுனன மிச்சத்த தூவ சொல்லிட்டு.. அந்தி கருக்கவும் வீட்டுக்கு வந்தோம்.
இரவில் சிறுநீர் கழித்த பிறகு மயக்கம் வருவது ஏன்.. அதை தவிர்ப்பது எப்படி.. டாக்டர் பரூக் விளக்கம்
வீட்டுக்கு வந்தவர்
வீட்டுக்கு வந்தவர் பட்டுனு திண்ணைலையே உக்காந்து கண்ணு முழி மேல நிலைகுத்தி பாக்குறாரு. அதோட எல்லாம் முடிஞ்சுருச்சு சார்" என்று அவரும் அவரது மகளும் கதறி அழுகின்றனர். "மா.. சக்கரை , ரத்த கொதிப்பு இருந்துச்சா?" " அதெல்லாம் எச்சோலியும் கெடையாது சார் அவருக்கு" "மா..ஐயாவுக்கு குடி சிகரெட்னு பழக்கம் ஏதாவது இருந்ததா?"
டெய்லி எத்தனை பாக்கெட்
"ஆமா.. சார்.. சிகரெட் நல்லா ஊதுவாரு " " டெய்லி எத்தனை சிகரெட் வரும்?" "மூணு பாக்கெட் வரும் சார்." " முப்பது சிகரெட்.. எத்தனை வருசமா இழுத்தாரு?" "அது பதினாறு வயசுல இருந்து சார்" " அப்ப கிட்டதட்ட நாற்பது வருசம் வருது.. சிகரெட் தான்மா கொன்னுருக்கு.. ஹார்ட் அட்டாக் வந்துருக்கு . நல்லா தினமும் வயக்காட்டுல உழைக்குற சம்சாரிக்கு ஹார்ட் அட்டாக்... நீங்க கவலைப்படாதீங்க மா.. மனச அமைதி படுத்துங்க..
சர்க்கரை கண்ட்ரோல்
உங்க சர்க்கரைய கண்ட்ரோல்ல வைக்கணும்" " சரிங்க சார்.. அப்படியே ஆகட்டும்" 50 வயது நாள்தோறும் கடினமாக உழைக்கும் சம்சாரியை கொல்லும் கொடிய பழக்கம் ஒரு வேலையும் செய்யாமல் இருந்து கொண்டு புகைக்கும் மக்களை எத்தனை விரைவில் கொல்லும் என்று எண்ணி மனம் நொந்தேன். திருந்தி மனம் மாறுவதற்கு இன்று கூட வாய்ப்பு இருக்கிறது. புகைப்பழக்கத்தால் இதய ரத்த நாள அடைப்பும்( CORONARY VASCULAR DISEASE) மூளை ரத்த நாள அடைப்பும் ( CEREBRAL VASCULAR DISEASE) கால்களின் ரத்த நாள சுருக்கமும்/அடைப்பும்( PERIPHERAL VASCULAR DISEASE) நுரையீரல் அழற்சி நோய் (ALLERGIC BRONCHITIS/ COPD) நுரையீரல் புற்று (LUNG CANCER) போன்றவறை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
புகை நமக்கு பகை
புகை நமக்குப் பகை மக்களே . நம்மை நம்பி நமது குடும்பமும் சமூகமும் இருக்கிறது. எந்த பழக்கங்களை நம் சந்ததியினர் செய்வதை விரும்பமாட்டோமோ அதை நாமும் செய்வதை நிறுத்துவதே நியாயம். இன்றே உணர்ந்து கைவிடுவீர். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.