இரவில் சிறுநீர் கழித்த பிறகு மயக்கம் வருவது ஏன்.. அதை தவிர்ப்பது எப்படி.. டாக்டர் பரூக் விளக்கம்
சென்னை: இரவில் சிறு நீர் கழித்த பிறகு ஏற்படும் மயக்க நிலையை (Post MICTURITIONAL syncope) தவிர்ப்பது எப்படி என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இரவில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது நமது சிறுநீர்ப்பை (Urinary Bladder) நிரம்பி சிறுநீர் கழிக்கும் இச்சை ஏற்படும். தூக்கம் களைந்து விடாமல் இருக்க படாரென்று எழுந்து பாத்ரூமை நோக்கி வேகமாக நடந்து சிறுநீர் கழிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு.
பெண்ணின் வீட்டில் டாக்டர் சுப்பையா சிறுநீர் கழித்த வழக்கு ரத்து.. திடீர் ட்விஸ்ட் - நடந்தது என்ன?
45 வயதுக்கு மேற்பட்டவர்கள்
இதில் குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிலும் நீரிழிவு / ரத்தக் கொதிப்பு / இதய நோய் / சிறுநீரக நோய் / கல்லீரல் நோய் போன்ற பிரச்சனைகளுடன் இருப்பவர்களுக்கு இரவு உறங்கிய பின் ஒருமுறையோ அதற்கு மேலோ சிறுநீர் கழிக்கும் இச்சை வருவதுண்டு
இவ்வாறாக சிறுநீர்ப்பை நிரம்பி இச்சை தோன்றியதும் எழுந்து சென்று நின்று கொண்டு சிறுநீர் கழிக்கும் போது கால் பகுதிகளில் ரத்தம் அதிகமாக தேக்கம் காணும்.
சிறிது நேரம் ரத்தம் தடைபடும்
இதனால் இதயத்துக்கு சிறிது நேரம் ரத்தம் கீழ்ப்பகுதியில் இருந்து செல்வது மட்டுப்படும். இதன் விளைவாக இதயத்தால் மூளைக்கு சரிவர ரத்தத்தை உந்தித் தள்ள முடியாது. எனவே மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும். இத்தகைய நிலையில் உடலின் ரத்த அழுத்தமும் குறைந்து நிலையை இன்னும் மோசமாக்கி மூளை சற்று நேரம் ப்ளாக் அவுட் ஆகும் தலைசுற்றல் / மயக்கம் / சிறிது நேர மூர்ச்சை நிலையாக்கிவிடும்.
எலும்புகளில்
என்ன நடந்தது என்று கணித்து சுதாரிப்பதற்கு முன் கீழே விழுந்து தலையிலோ எலும்புகளிலோ பலத்த காயம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. இது போன்ற நிலையைத் தவிர்ப்பது எப்படி??? சிறுநீருக்கான இச்சை ஏற்பட்டவுடன் வெடுக்கென எழாமல் முதலில் கால்களை கட்டிலில் இருந்து தொங்கப்போட வேண்டும். சில நொடிகள் கழித்து எழுந்து அமர வேண்டும்.
ஒன்றிரண்டு முறை அசைக்க வேண்டும்
பிறகு கால்களை ஒன்றிரண்டு முறை அசைக்க வேண்டும். டெய்லரிங் செய்வது போல பெடல் அழுத்துவது போல் செய்ய வேண்டும். சில நொடிகள் பொறுத்திருக்க வேண்டும் இப்போதும் தலை சுற்றல் / மந்தத்தன்மை ஏற்படவில்லையென்றால் எழுந்து நிற்க வேண்டும் ( தலைசுற்றல் ஏற்படுவது போன்று தோன்றினால் உடனே படுத்துவிட வேண்டும். சிறிது நேரம் கழித்து மீண்டும் எழுந்து சிறுநீர் கழிக்க செல்லலாம்).
பாத்ரூம்
மெதுவாக பாத்ரூம் நோக்கி நடக்க வேண்டும். பாத்ரூமில் அமர்ந்து சிறுநீர் கழிப்பதை பழக்கமாகக் கொள்ள வேண்டும். நின்று கொண்டு சிறுநீர் கழிக்கும் போது தலைசுற்றல் ஏற்படும் நிலை வரலாம். சிறுநீர் கழிக்கும் போது மந்தத்தன்மை கிறுகிறுப்பு ஏற்படுவது போன்று தோன்றினால் சிறுநீர் கழிப்பதை நிறுத்தி விட்டு கால்களை ஒன்றோடு ஒன்று பிணைத்துக் கொண்டு அமர்ந்து கொள்ளலாம். கால்களை மடக்கி நீட்ட முயற்சி செய்யலாம். இதனால் தலை சுற்றல் ஏற்பட்டு கீழே விழுவதை தவிர்க்க முடியும்.
தலைச்சுற்றல்
சரி இரவு சிறுநீர் கழிக்கும் போது தலைசுற்றி விழுந்து விட்டால் என்ன செய்வது? உடனே காலை நீட்டி படுத்து விட வேண்டும். பதினைந்து முதல் அரை மணிநேரத்திற்கு எழுந்து நடப்பதற்கோ நிற்பதற்கோ முயற்சி செய்வது கூடாது. இந்த இடைவெளியில் மீண்டும் எழுந்தால் மூளைக்கு இன்னும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு வலிப்பு ஏற்படும் வாய்ப்பும் உண்டு. சற்று நிலை சீரானதும் மெல்லமாக எழுந்து அல்லது ஊர்ந்து வந்து வெளியே படுத்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற மயக்க நிலை சில நிமிடங்களில் குணமாகிவிடும்.
ரத்த அழுத்தம்
காலை மருத்துவரிடம் சென்று முறையான ரத்த அழுத்தம் , ரத்த சர்க்கரை போன்ற பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்திற்கு/ ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்கு உட்கொண்டு வரும் மாத்திரைகளில் சில எழுந்து நின்றால் ரத்த அழுத்தத்தைக் குறைக்கக்கூடும். இவர்களுக்கு அதிக கவனம் தேவை. இரவு உறங்கச் செல்வதற்கு சற்றுமுன் நீர் அருந்துவதையோ திரவங்கள் அருந்துவதையோ தவிர்த்து உறங்குவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பே இரவுணவையும் தண்ணீர் பருகுதலையும் முடித்து விட வேண்டும்.
இரவு உறங்கச் செல்லும் முன் சிறுநீர் கழித்தல்
இரவு உறங்கச் செல்லுமுன் சிறுநீர்கழித்து விட்டு உறங்க வேண்டும். இப்படி இரவு சிறுநீர் கழித்த பின் மயக்கநிலை ஏற்பட்டு பல முதியோர்கள் தலைக்காயம் , எலும்பு முறிவுக்கு உள்ளாகின்றனர். இதைப்பற்றிய விழிப்புணர்வு அனவருக்கும் கிடைத்தால் நிச்சயம் இதுபோன்ற நிகழ்வு நடக்கும் முன்பு தவிர்க்க இயலும். இவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தில் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.