புத்தாண்டு நாளில் வறண்ட வானிலை..3 நாட்களுக்கு லேசான மழையும் இருக்குமாம்!
சென்னை: வடகிழக்கு பருவமழை மெல்ல மெல்ல முடிவுக்கு வரப்போகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 30ஆம் தேதி வரைக்கும் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புத்தாண்டு நாளில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இயல்பான அளவு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த பருவமழை காலத்தில் ஒரே ஒரு புயல் மட்டுமே டிசம்பர் மாத துவக்கத்தில் சென்னை அருகே கரையைக் கடந்தது. அதுவும் பெரிய அளவில் மழையை கொடுக்கவில்லை.

நவம்பர் மாதத்தில் பெய்த கனமழையால் சென்னை புறநகரில் உள்ள இரையூர், செம்பரம்பாக்கம், நத்தப்பேட்டை, வையூர், கொளப்பாக்கம், அரனேரி, வையூர், புல்லிட்டின்தாங்கல் உள்ளிட்ட 14 ஏரிகள் நிரம்பி வழிகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளதால் அம்மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில், 282 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. 57 ஏரிகள் 75 சதவீதத்திற்கு மேலாகவும், 24 ஏரிகள் 50 சதவீதத்திற்கு மேலாகவும், 18 ஏரிகள் 25 சதவீதத்திற்கு மேலாகவும் நிரம்பி உள்ளன. அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்களும் நிரம்பி உள்ளன. இதனால் அம்மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், வீராணம் ஆகிய சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளும் நிரம்பியுள்ளன.
மெல்ல மெல்ல மழை குறைந்து வருகிறது. தென் மாவட்டங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆய்க்குடி, காக்காச்சி, திருச்செந்தூர், ஊத்து ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இன்று முதல் 30.12.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications