நாம் தரம் தாழ்ந்து நடக்கக் கூடாது! கண்ணியம் முக்கியம்! மதிமுகவினருக்கு துரை வைகோ வேண்டுகோள்!
சென்னை: சமூக வலைதளங்களில் நம்மை விமர்சிப்பவர்களை நாமும் அவர்கள் அளவுக்கு இறங்கி வந்து பதில் சொன்னால் நம்முடைய கண்ணியம் தான் கேள்விக்குறியாகும் என மதிமுகவினருக்கு துரை வைகோ அறிவுரை வழங்கியுள்ளார்.
மதிமுகவினர் பொதுவெளியில் கண்ணியம் காக்க வேண்டும் என்றும் நாம் தரம் தாழ்ந்து நடக்கக் கூடாது எனவும் உருக்கமுடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
என்னாது விருதுநகர் எம்பி தொகுதியை கேட்டேனா.. ராகுலுடன் நான் பேசியது என்ன?.. துரை வைகோ
சமூக ஊடகம்
சமூக ஊடகம் என்பது கத்தியின் இரண்டு முனைகளைப் போன்றது. எந்தளவுக்கு நன்மையோ அதே அளவுக்கு பின்னடைவுகளையும், விமர்சனங்களையும் அதனால் சந்திக்க நேரிடும். அதுவும் அரசியல் பொதுவாழ்வில் இருப்பவர்கள் சமூக ஊடகங்களை மிகுந்த கவனமுடன் கையாள வேண்டும். ஒரு கருத்துக்கு எதிர் கருத்து எப்போதும் இருக்கும். ஆரோக்கியமான விவாதங்கள் மட்டுமே நன்மை பயக்கும்.
வசவு மொழிகள்
கீழ்த்தரமான விமர்சனங்களும், வசவு மொழிகளும் நம் தரத்தை மட்டுமல்ல. நாம் சார்ந்திருக்கும் இயக்கத்திற்கும் பின்னடைவை ஏற்படுத்தி விடும்.
சமீபத்தில் நம் கழகத் தோழர் ஒருவரின் எதிர்வினை சமூக ஊடகத்தில் அவ்வாறாக இருப்பதை அறிந்தேன். அது, தலைவர் வைகோ அவர்களுக்கும், எனக்கும், கட்சிக்கும் அவப்பெயரை தான் உண்டாக்கி இருக்கின்றது.
கண்ணியம் கேள்விக்குறியாகும்
'மாமனிதன் வைகோ' ஆவணப்படம் திரையிடல் நிகழ்வுகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் நான் பதிவேற்றி வருகின்றேன். அதில், பலநூறு பின்னூட்டங்கள் மிகவும் கீழ்த்தரமாகவும், கொச்சையான மொழியிலும் தான் எழுதப்பட்டு இருந்தது. அவ்வாறு பின்னூட்டம் எழுதுகிறவர்களை, என் பக்கத்தில் இருந்து உடனே ப்ளாக் செய்து விடுகிறேன். அவர்களுக்கு நாமும் இறங்கி வந்து பதில் சொன்னால் நம்முடைய கண்ணியம் கேள்விக்குறியாகி விடும்.
உயர்வும், தாழ்வும்
என் பக்கத்தில் நாம் சார்ந்த கொள்கைகளை, கருத்துக்களை, நிகழ்வுகளை மட்டுமே எழுதி வருகின்றேன். யாரையும் காயப்படுத்தி பதிவிடுவது இல்லை. இன்றைய சூழலில் சமூக ஊடகம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கருவி. அதை நாம் பயன்படுத்தும் விதத்தில் தான் நம்முடைய உயர்வும், தாழ்வும் அளவிடப்படுகின்றது.
தரத்தை இழக்க வேண்டாம்
ஆகவே, சமூக ஊடகங்களில் இயங்கும் நம் கழகத் தோழர்கள் மிகவும் நாகரீகத்துடனும், கண்ணியத்துடனும் பதிவிட வேண்டும். எதிர் கருத்து உடையவர்களின் அறியாமைக்காக, அவர்களின் சித்தாந்தப் புரிதலுக்காக நாமும் நம் தரத்தை இழந்துவிடக் கூடாது. பொதுவெளியில் கண்ணியம் காப்போம் என்பதே என் அன்பான வேண்டுகோள். அதுவே நமக்கு நன்மை தரும்.