திமுக உட்கட்சித் தேர்தல்! சூடுபிடிக்கும் போட்டி! துரைமுருகன் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
சென்னை: திமுகவில் உட்கட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், ஒன்றியச் செயலாளர் பதவிக்கான தேர்தல் தேதியை அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது.
வருகிற 16-ம் தேதி முதல் 18-ம் தேதிக்குள் ஒன்றியச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அது தொடர்பான விவரம் வருமாறு;
சனாதன தர்மம் குறித்து பேசுவதா? வகிக்கும் பதவிக்கு இது அழகல்ல! ஆளுநர் ரவிக்கு திமுக கண்டனம்!
உட்கட்சித் தேர்தல்
''திமுகவின் 15-வது பொதுத்தேர்தலில் கீழ்கண்ட மாவட்டங்களில் உள்ள ஒன்றிய கழகத்துக்கான அவைத்தலைவர், செயலாளர், பொருளாளர், துணைச்செயலாளர்கள்-மாவட்ட பிரதிநிதிகள், 11 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 16-ம் தேதி முதல் 18-ம் தேதிக்குள் நடைபெற உள்ளது.''
ரசீது அவசியம்
''தலைமை கழக பிரதிநிதிகள் தேதி, இடம், அறிவித்து தேர்தல் நடத்துவார்கள். இதற்கான வேட்பு மனுவை மாவட்டச்செயலாளர், பொறுப்பாளர் அல்லது தலைமைக்கழத்தில் பெற்று முறைப்படி வேட்புமனுவை பூர்த்தி செய்து அதற்கான கட்டணத்துடன் வருகிற 15-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் மாவட்ட கழக அலுவலகத்தில் தலைமைக்கழகத்தால் அனுப்பி வைக்கப்படும் பிரதிநிதியிடம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.''
கொங்கு மாவட்டங்கள்
''இதில் உறுப்பினராக உள்ள ஒன்றியங்களில் மேற்கண்ட பொறுப்புகளுக்கு போட்டியிடலாம். செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்புக்கு போட்டியிடுவோர் அந்தந்த ஒன்றியங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக இருக்க வேண்டும். இதில் போட்டி இருந்தால் ஜுன் 16-ந் தேதி முதல் 18-ந் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும். தற்போது நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெறும்.''
குவியும் புகார்கள்
இதனிடையே பல மாவட்டங்களிலும் திமுக மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களுக்கு எதிராக அக்கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் பலர் தலைமைக் கழகத்துக்கு புகார்களை அனுப்பி வருகின்றனர். இதனால் அந்த புகார்கள் தொடர்பான பஞ்சாயத்தும் அறிவாலயத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.