செப் 30 இல் ஆஜராகுமாறு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வரும் 30ஆம் தேதி ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர். இவர் கடந்த சட்டசபைத் தேர்தலில் செந்தில் பாலாஜியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவியர்.
இந்த நிலையில் கடந்த 2016- 2021 ஆம் ஆண்டு வரை எம்.ஆர். விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கி குவித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கரூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவருக்கு சொந்தமான வீடு உள்பட மொத்தம் 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். தமிழகம் முழுவதும் எம்.ஆர். விஜயபாஸ்கர், உறவினர்கள், நண்பர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
சென்னை, கரூர் உள்பட தமிழகம் முழுவதும் அவரது வீடு, சாயப்பட்டறை, அடுக்குமாடி குடியிருப்புகள் என்பன உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதிமுக ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக செல்லும் வாகனங்களின் எண்களை கண்காணிக்க வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்துவதற்காக 2019 ஆம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. இதில் 23 கோடி ரூபாய் டெண்டரை ரூ 900 கோடிக்கு உயர்த்தியதாக எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சோதனையில் டெண்டர் குறித்த முக்கிய ஆவணங்களும், தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய ஆவணங்களும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்த எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத் துறை முடிவு செய்தது. அதன்படி வரும் 30 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
பிஞ்சிலேயே.. மிரட்டும் க்ரைம்.. சிக்கும் சிறார்கள்.. தமிழகத்தில் 5 வருடங்களில் குற்றங்கள் இரட்டிப்பு