ஆத்தி.. இது அதுல்ல! பார்த்ததும் “பதறிய” எடப்பாடி அண்ட் கோ - கைது செய்ய வந்த “பிங்க்” நிற இலவச பஸ்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை சபாநாயகர் அப்பாவு அறிவிக்காததை எதிர்த்து கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் மகளிருக்கான கட்டணமில்லா ரோஸ் நிற பேருந்தில் கைது செய்து அழைத்து செல்லப்பட்டனர்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல்போக்கு நீடித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் எடப்பாடி தரப்பு நடத்திய பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் வழங்கினார் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவுக்கும் அவரது தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
வசமாக சிக்கிய எடப்பாடி.. தடையை மீறியா போராடுறீங்க.. பாய்ந்த வழக்குகள்.. என்ன பிரிவுகள் தெரியுமா?
ஓபிஎஸ் வழக்கு
இதேபோல் எடப்பாடி பழனிசாமி தரப்பு நியமனங்களை ஏற்கக்கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் அப்பாவுவுக்கு கடிதம் எழுதப்பட்டது. அதேபோல் பொதுக்குழுவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கில், எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு
இதனால் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் வசம் மீண்டும் அதிமுக பதவிகள் வந்தன. ஆர்.பி.உதயகுமார் நிறுவனம் செல்லாமல் போனது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுக்குழுவை செல்லும் என்றும் உத்தரவிட்டதால் மீண்டும் ஓபிஎஸ் நீக்கம் செல்லுபடியானது.
சபாநாயகர் அப்பாவு
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆனால், சபாநாயகர் அப்பாவு எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அறிவிக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அதே இருக்கையே ஒதுக்கப்பட்டிருந்தது.
இபிஎஸ் தரப்பு வெளியேற்றம்
இதனை எதிர்த்து நேற்று முந்தினம் சட்டமன்றக் கூட்டத்தை புறக்கணித்தனர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர். நேற்றும் இதனை கண்டித்து இபிஎஸ் ஆதரவாளர்கள் சட்டமன்றத்திலேயே முழக்கமிட்டதால் அவர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற உத்தரவை சபாநாயகர் பின்பற்றவில்லை என்று குற்றம்சாட்டினார்.
உண்ணாவிரதம்
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக ஆர்.பி.உதயகுமார் அறிவிக்கப்படாததை எதிர்த்து, சட்டமன்றக் கூட்டத்தை புறக்கணித்து இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழ்நாடு அரசுக்கு எதிராக அதிமுகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இலவச பேருந்து
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர், அதிமுக மூத்த நிர்வாகிகளை போலீசார் பேருந்து ஏற்றி கைது செய்தனர். எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்ய மகளிருக்கான பிங்க் நிற இலவச பேருந்து கொண்டு வரப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக ஐடி விங் நிர்வாகி ஒருவர் ஓசி பேருந்தில் ஏற மாட்டோம் என மூதாட்டியை பேசவிட்டு வீடியோ எடுத்ததாக கூறி வழக்குப்பதிவானது குறிப்பிடத்தக்கது.