தேவர் குருபூஜை: தங்கக்கவசம் எங்களுக்கு தான்! ஈபிஎஸ் தரப்பின் மாஸ்டர் பிளான்!ராஜன் செல்லப்பா விளக்கம்
சென்னை: தேவர் குருபூஜையின்போது முத்துராமலிங்க தேவருக்கு அணிவிக்கப்படும் தங்ககவசத்தை வங்கி நிர்வாகம் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ராஜன் செல்லப்பா கூறினார். இதற்கிடையே அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் இன்று தேவர் நினைவிட அறங்காவலர் காந்திமீனாவை சந்தித்து ஆதரவு கோரினர்.
முத்துராமலிங்க தேவருக்காக கடந்த 2014ம் ஆண்டில் ரூ.1.5 கோடி மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
இந்த தங்க கவசம் அக்டோபர் 30ம் தேதி தேவர் குருபூஜையின்போது ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங் தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அணிவிக்கப்படும்.
முத்துராமலிங்கத் தேவர் உறவுகளை சந்திக்கும் 5 அதிமுக மாஜி அமைச்சர்கள்! திடீர் பயணத்தின் பின்னணி என்ன?
உள்கட்சி பூசலால் குழப்பம்
இந்த தங்க கவசம் மதுரையில் உள்ள தனியார் வங்கியில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. தேவர் ஜெயந்தி விழாவின்போது அதிமுகவின் பொருளாளராக இருந்த ஓ பன்னீர் செல்வத்தை தங்க கவசத்தை எடுத்து செல்வார். தற்போது அதிமுகவில் உள்கட்சி பூசல் ஏற்பட்டு எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றன.
தங்ககவச உரிமை கோரல்
மேலும் ஓ பன்னீர் செல்வத்தை அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கியுள்ளார். மேலும் கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தங்கக் கவசத்தை தன்னிடம் வழங்கக்கோரி வங்கியில் மனு அளித்துள்ளார். அதேபோல ஓ பன்னீர் செல்வம் தரப்பில் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக்கூறி மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், தேவர் குருபூஜை அன்று தங்கக் கவசத்தை யார் பெறுவது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகத்திடம் தங்க கவசம் ஒப்படைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ராஜன் செல்லப்பா பேட்டி
இந்நிலையில் தான் அதிமுகவின் எம்எல்ஏவும், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளருமான ராஜன் செல்லப்பா கூறியதாவது: சுதந்திர போராட்ட தியாகி முத்துராமலிங்க தேவரை போற்றும் வகையில் ஜெயலலிதா தங்க கவசம் வழங்கினார். முந்தைய ஆண்டுகளை போல் இந்த ஆண்டும் தங்ககவசம் உரிய முறையில் குருபூஜை நாளில் முத்துராமலிங்க தேவருக்கு அணிவிக்கப்பட வேண்டும். இதில் அதிமுக உறுதியாக உள்ளது.
காந்தி மீனாவுடன் சந்திப்பு
அதன்படி கட்சியின் பொருளாளராக பொறுப்பு வகித்து வரும் திண்டுக்கல் சீனிவாசன் அதற்கான பொறுப்பை ஏற்றுள்ளார். தங்க கவசத்தை வங்கியில் இருந்து பெற்று அறக்கட்டளையிடம் ஒப்படைக்கும் பணியை ஏற்றுள்ளார். இதற்காக கோரிக்கை வைத்து செயல்பட்டு வருகிறோம். தேவர் நினைவிட அறங்காவலர் காந்தி மீனாவை சந்திக்க உள்ளோம். திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நான், நத்தம் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்பி உதயக்குமார், கருப்பசாமி பாண்டியன், விஜயபாஸ்கர், காமராஜ், ஓஎஸ் மணியன் உள்பட பலர் சென்று அறக்கட்டளையை சந்திக்க உள்ளோம்.
சீனிவாசன் வழங்குவார்
அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தங்ககவசத்தை பெற்று வழங்குவார் என கூறுவோம். கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை பணபரிவர்த்தனைகளுக்கான வங்கி ஏற்றுள்ளது. மேலும் அதிமுக என்பது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இதனை யாரும் மறுக்க முடியாது. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்பது அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இயங்கும் என்பதை மிக தெளிவாக கூறியுள்ளது'' என்றார்.
அறங்காவலருடன் சந்திப்பு
இதன் தொடர்ச்சியாக தேவர் குருபூஜைக்கான தங்க கவசத்தை மதுரை தனியார் வங்கியில் இருந்து பெறுவதில் தேவர் நினைவிட அறங்காவலரின் ஒப்புதல் முக்கியமாகும். அதனால் தான் இன்று அறங்காவலர் காந்தி மீனாவை எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது அவரது ஆதரவை எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.