அதிருப்தி நிர்வாகிகள்.. எடப்பாடி பழனிசாமி கொடுத்த அசைன்மெண்ட்.. சவாலில் சாதிக்குமா அதிமுக?
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரே நேரத்தில் இரு சவால்களை சந்திக்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை சரி செய்து மீண்டும் கட்சிப் பணிக்கு அழைத்து எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருக்கிறார். மறுபுறம் திமுக பக்கம் கூடுதலாக சில கட்சிகள் கூட்டணி அமைத்துவிடக் கூடாது என்று பேச்சுவார்த்தையையும் தொடங்கி இருக்கிறார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதிமுகவில் இருந்து முன்னாள் நிர்வாகிகளையும், அதிருப்தியாளர்களையும் திமுக தூக்கிக் கொண்டே வருகிறது. அதனை தடுக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி வேடிக்கை பார்க்கும் நிலை நீடித்து வருகிறது.

அண்மையில் அன்வர் ராஜா, மைத்ரேயன், மருது அழகுராஜ், மனோஜ் பாண்டியன், சின்னசாமி என்று ஏராளமான நிர்வாகிகள் அதிமுக பக்கம் சென்றுவிட்டனர். அதேபோல் செங்கோட்டையனும் தவெகவில் இணைந்துவிட்டார். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு முதன்மை சவாலாக இந்த விவகாரம் மாறி இருக்கிறது. இதனை தடுக்க மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
அதன்படி முன்னாள் அமைச்சர்கள், மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் வேட்பாளராக அறிவிக்கப்படுவோர் அதிமுகவில் இருக்கும் முக்கிய அதிருப்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்தி இருக்கிறார். இதனால் திமுக அல்லது தவெக பக்கம் சென்றால் நல்ல பதவி கிடைக்கும், பொறுப்பு கிடைக்கும் என்று அதிமுகவில் ஆலோசித்து வரும் நிர்வாகிகளை அடையாளம் காண தொடங்கி இருக்கின்றனர்.
சட்டசபைத் தேர்தலுக்கு முன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சிக்கு வந்தால், நிச்சயம் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்றும் தேர்தலின் போது விட்டமின் M நிச்சயம் நிர்வாகிகளுக்கு கூடுதலாக அளிக்கப்படும் என்று கூறி வருகின்றனர்.
இதனால் அதிருப்தியில் இருந்த அதிமுக நிர்வாகிகள் பலரும் உற்சாகத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இருந்து இன்னொரு அதிமுக நிர்வாகியை இழக்க அதிமுக தயாராக இல்லை என்பதால், அந்த மாவட்டங்களில் இந்த சிக்கல் முதற்கட்டமாக களையப்பட்டு வருகிறது.
அதேபோல் திமுக பக்கம் வேறு சில கட்சிகள் செல்லாமல் இருக்க வேண்டும் என்று தேமுதிக மற்றும் பாமகவின் இரு பிரிவுகளுடனும் எடப்பாடி பழனிசாமி தரப்பு பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் டிசம்பர் முடிவில் அதிமுக கூட்டணி முழுமை பெறும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையோடு இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications