சக்கரம் மேல வந்தா என்ன ஆகும் தெரியுமா..? ஞாபகம் இருக்கட்டும் ஸ்டாலின் - திமுகவை சீண்டிய எடப்பாடி!
சென்னை : இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் சீண்டியுள்ளார்.
Recommended Video
ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக உதவி செய்வதாகவும், இருவரும் இணைந்தே அதிமுக தலைமைக் கழகத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் ஈபிஎஸ்.
காலத்தின் சக்கரம் மீண்டும் மேலே வரும், கீழே உள்ள சக்கரம் மேலே வந்தால் என்ன ஆகும் என்பதை ஸ்டாலின் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார் ஈபிஎஸ்.

கைப்பற்றிய ஈபிஎஸ்
இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். பொதுச் செயலாளரை தேர்தல் மூலம் தேர்தெந்தெடுப்பதற்கான வழிமுறைகளும் தீர்மானிக்கப்பட்டன. கட்சியின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் விரோதமாக செயல்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகிய நான்கு பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியது பொதுக்குழு.

நம்பி கொடுத்தார்
பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "விவசாய குடும்பத்தில் பிறந்த என்னை இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்துள்ளீர்கள். 1974ஆம் ஆண்டு சிலுவம்பாளையத்தில் கிளைச் செயலாளராக இணைந்தேன். என்னுடைய பகுதி காங்கிரசின் கோட்டையாக இருந்து வந்தது. கொடிக்கம்பத்தை நடுவேன், அதனை காங்கிரஸ் கட்சியினர் பிடுங்கி விடுவார்கள். அவ்வளவு வலுவாக இருந்த காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பணியாற்றினேன். ஜெயலலிதாவிடம் நற்பெயரை பெறுவது அவ்வளவு எளிதல்ல. என்னுடைய பணியைப் பார்த்து எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை ஜெயலலிதா வழங்கினார்.

எட்டப்பன்
கட்சிக்காக உழைப்பவர்கள் வெளியேற மாட்டார்கள். எட்டப்பனாக வேலை பார்ப்பவர்கள் வெளியே செல்லலாம். தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சிதான் அதிக ஆண்டுகள் நடைபெற்றுள்ளது. அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை செவ்வனே நிறைவேற்றுவோம். ஒரு மாதம் கூட ஆட்சி நிலைக்காது என கூறிய ஸ்டாலினே அதிர்ந்து போகும் அளவுக்கு நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்தோம்." எனப் பேசினார்.

திமுக மாதிரியா?
மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி திமுகவையும் கடுமையாகச் சீண்டியுள்ளார். ஈபிஎஸ் பேசுகையில், "தி.மு.க மாதிரி அ.தி.மு.க என்ன கம்பெனியா? எடப்பாடி பழனிசாமி இல்லை என்றாலும் சின்னச்சாமி கூட கேள்வி கேட்பான். தனக்கு கிடைக்காத பதவி எவருக்கும் கிடைக்கக்கூடாது என்பதில் சுயநலம் மிக்கவர் ஓ.பன்னீர்செல்வம். தி.மு.கவின் கைக்கூலி ஓ.பன்னீர்செல்வம். எத்தனை ஓபிஎஸ் வந்தாலும் அ.தி.மு.கவிலிருந்து ஒரு தொண்டனையும் பிரிக்க முடியாது. ஓ.பன்னீர்செல்வமும், ஸ்டாலினும் இணைந்து தலைமைக் கழகத்தில் வன்முறையை நிகழ்த்தியுள்ளார்கள். என்னை பழைய பழனிசாமி என நினைத்துவிட்டீர்களா?

நினைவில் கொள்ளுங்கள் ஸ்டாலின்
எங்களை அழிக்க நினைப்பவர்கள் அடியோடு அழிந்து விடுவார்கள். அ.தி.மு.கவை கொட்ட கொட்ட எங்கள் தலை நிமிரும். காலத்தின் சக்கரம் மீண்டும் மேலே வரும். கீழே உள்ள சக்கரம் மேலே வந்தால் என்ன ஆகும் என்பதை ஸ்டாலின் நினைவில் கொள்ள வேண்டும். அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரும், எவராலும் தடுக்க முடியாது. வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்ந்து சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அதற்கும் தயாராக இருப்போம்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications