சல்லி சல்லியா நொறுங்கிய கணக்கு! கடுப்பான எடப்பாடி & கோ! டெல்லியில் சாதித்த ‘வாரிசு’! இங்கே எப்படி?
சென்னை : அதிமுகவில் 99 சதவீத நிர்வாகிகளின் ஆதரவு தனக்கு இருந்த போதிலும் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் தான் அளித்த கடிதங்களை சபாநாயகர்கள் ஏற்றுக்கொள்ளாததாலும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக அதிமுக கட்சிக்குள்ளே ஒரு கலவரமே வெடித்து நடந்து கொண்டிருக்கும் நிலையில் கிட்டத்தட்ட கட்சியை எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றி விட்டதாகவே அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ் பக்கம் செல்லாமல் எடப்பாடி தரப்பில் தஞ்சமடைந்துள்ளனர். மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட குறிப்பிட்ட சிலர் மட்டுமே ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு ஆதரவாக உள்ளனர்.

அதிமுக விவகாரம்
அதே நேரத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக முழு மனதோடு பணியாற்ற முடியாத நிலையில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. காரணம் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இன்னும் அதிகாரப்பூர்வ உறுப்பினர்களாகவே தொடர்ந்து வருகின்றனர். அதிமுக பொதுக்குழு நடைபெற்ற போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதோடு அவரது மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் கட்சியிலிருந்து நீக்கிவைக்கப்பட்டதாகவும் அவர் அதிமுக உறுப்பினராக தொடரக்கூடாது என நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினார் எடப்பாடி பழனிச்சாமி.

ஓ.பன்னீர்செல்வம்
இதேபோல ஓ.பன்னீர்செல்வம் வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கிடையாது என சட்டமன்ற சபாநாயகர் அப்பாவுவுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த கடிதங்களுக்கு உரிய பதில் அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில் நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் ஓபி ரவீந்திரநாத் குமார் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராகவே தொடர்கிறார். மேலும் அதிமுக குழு தலைவராகவும் அவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல தமிழக சட்டசபை செயலர் மற்றும் சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட கடிதம் குறித்தும் இதுவரை முடிவு வெளியாகவில்லை.

அடுத்தடுத்து பின்னடைவு
இது குறித்து பேசிய அப்பாவு சட்டமன்ற கூட்டத்தொடரில் இருவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடும் அதிர்ச்சியில் இருக்கிறது. காரணம் இவர்கள் எந்த கருத்தை முன் வைத்தாலும் அது அதிமுகவின் கருத்தாகவே எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய நிலை இருக்கிறது. குறிப்பாக நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு அதிமுக எம்பி தான் மக்களவையில் இருக்கும் நிலையில் அதுவும் ஓபிஎஸ் ஆதரவாளராக இருப்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இறுதி முடிவு என்ன?
நீதிமன்ற தீர்ப்புகள் மாறி மாறி வரும் நிலையில் தேர்தல் ஆணைய முடிவு தான் அரசியல் கட்சிகளை பொறுத்தவரை இறுதி முடிவாக பார்க்கப்படும். அந்த வகையில் தற்போது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக உறுப்பினர்களாகவே தொடர்கின்றனர். தேர்தல் ஆணைய முடிவு எடுக்கப்படாத நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளராக ஓ பன்னீர் செல்வமே இருக்கிறார் என்கின்றனர் ஓ பன்னீர்செல்வம் தரப்பினர். மேலும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கடும் அதிர்ச்சியில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த ஊரான சேலத்தில் இருக்கிறார்.

மாஜிக்களிடம் சுணக்கம்
அவரை உள்ளூர் நிர்வாகிகள் தவிர வேறு நிர்வாகிகள் யாரும் சந்திக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு இணக்கமாகவே செல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் அவர் முன் வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் பல வழிகளில் தனக்கு அடுத்தடுத்து பின்னடைவு ஏற்பட்டு வரும் நிலையில் கடும் மன உளைச்சலில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தனக்கு நெருக்கமான மூத்த அமைச்சர்களிடம் இது குறித்து விரிவாக பேசி உள்ளதாக கூறுகின்றனர் சேலம் ரத்தத்தின் ரத்தங்கள்.












Click it and Unblock the Notifications