30 வருடங்கள் பிறகு திரும்பிய வரலாறு.. ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமிதான்.. கிடைத்த கவுரவம்
சென்னை: அதிமுகவில் 2021 ஆம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம் 30 வருடங்களுக்கு பிறகு முதன் முறையாக அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் என்ற ஒரு பெயர் முன்னிலைப்படுத்தப் பட்டுள்ளது.
அந்த வகையில் ஜெயலலிதாவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமிதான் இப்படியாக ஒரு அறிவிப்புக்கு பிறகு தேர்தலை சந்திக்கப் போகும் வேட்பாளராக பார்க்கப்படுகிறார்.
ஜெயலலிதா வீட்டினை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு : தீபா, தீபக் வழக்குகளை தனி நீதிபதி விசாரிக்க உத்தரவு
முதல்வர் எம்ஜிஆர்
திமுகவிலிருந்து பிரிந்து வந்த எம்ஜிஆர் 1972ஆம் ஆண்டு அதிமுக கட்சியை துவங்கினார். வெறும் ஐந்தே ஆண்டுகளில் 1977 ஆம் ஆண்டு ஆட்சிக் கட்டிலை பிடித்தது அதிமுக. 1987ஆம் ஆண்டு எம்ஜிஆர் மறையும் வரை முதல்வராக இருந்தார். அதுவரை, அடுத்தடுத்த தேர்தல்களிலும் அதிமுகதான் வெற்றி பெற்றது.
ஜெயலலிதா பெயர் அறிவிப்பு
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி ஜானகி தலைமையில் ஒரு அணியும், ஜெயலலிதா தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி அதிமுக இரண்டாக பிரிந்தது. இதன்பிறகு 1991ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது முதல்வர் வேட்பாளராக அதிமுக சார்பில் ஜெயலலிதா அறிவிக்கப்பட்டார். அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி கொலையான காலகட்டத்தில் அந்த பொதுத் தேர்தல் நடைபெற்றது. எனவே அதிமுக அமோக வெற்றி பெற்றது.
ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி
இதன்பிறகு 2016ம் ஆண்டு தேர்தல் நடைபெறும்வரை, முதல்வர் வேட்பாளராக ஜெயலலிதாதான் தொடர்ந்தார். அதற்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் எம்ஜிஆர், அதன்பிறகு ஜெயலலிதா ஆகியோருக்கு பிறகு, அதிமுக சார்பில் முதல் முறையாக ஒருவர் முதல்வர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ளார், என்றால் அது எடப்பாடி பழனிசாமி தான். அந்தவகையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு இது ஒரு முக்கியமான திருப்புமுனையாகும்.
திமுக, அதிமுக இரு கட்சிகள்
பொதுவாக, முதல்வர் வேட்பாளர் மாற்றம் என்பது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே அவ்வப்போது நடப்பது கிடையாது. அந்த இரு கட்சிகளிலும் கட்சியை தாண்டி தலைவர்கள் ஆதிக்கம் செலுத்துவது இதற்கு முக்கிய காரணம். அறிஞர் அண்ணா, அதன் பிறகு கருணாநிதி ஆகியோர் திமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, முதல்வராக பதவி ஏற்றவர்கள். இதன்பிறகு 2021ம் ஆண்டில் ஸ்டாலின் அந்த இடத்துக்கு வருவார் என்பது எதிர்பார்ப்பு. ஆகமொத்தம், தமிழகத்தின் இருபெரும் கட்சிகளிலும், முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு என்பது அரிதாக நிகழக்கூடிய நிகழ்வு என்பதால் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.