வணிக நிறுவனங்கள், பள்ளிகளுக்கு மின் கட்டணம் உயர்கிறதா? அமைச்சர் சிவசங்கர் அறிக்கையில் ட்விஸ்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். அதேபோல் அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என்று கூறி இருக்கிறார். இருந்தாலும், வீட்டு மின் இணைப்புகள் என்று மட்டும் கூறி இருப்பதால், வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 4 முறை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என்று 3 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டணத்தை மின் வாரியம் வசூலித்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக கூறி இருந்தது. இதனிடையே தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை 3 சதவிகிதம் வரை உயர்த்த மின்சார வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை. எனினும் ஒழுங்குமுறை தொடர்பான ஆணையை ஆணையம், வழங்கிடும்போது, மின்கட்டணம் அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல் தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும் என்று கூறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டு மின் இணைப்புகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படாது என்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால் வீடுகள் தவிர்த்து பள்ளிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications