ஓபனாக ஓபிஎஸ்சுக்கு சப்போர்ட்.. சீனுக்குள் வந்த பண்ருட்டி.. எடப்பாடிக்கு ஆற்றல் போதாது என அட்டாக்
சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியை வழிநடத்த அரசியலில் போதிய ஆற்றலும், அனுபவமும் இல்லை என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் அதிமுகவின் மூத்த உறுப்பினரான பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்தில் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், "எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் இயக்கத்திற்காக அரும்பாடுபட்டவர் என்ற அடிப்படையில் மரியாதை நிமித்தமாகவே அண்ணன் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்தோம். எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகளை பொறுத்திருந்து பாருங்கள். அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும்" என்று தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன் சசிகலா பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இப்போது ஓபிஎஸ் சந்தித்துள்ளதால், விரைவில் சசிகலா - ஓபிஎஸ் சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான். அவருக்கு அரசியலில் போதுமான அனுபவமும், ஆற்றலோ இல்லை.

இபிஎஸ்-க்கு அனுபவமில்லை
நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் அதிமுக தோல்வியையே சந்தித்துள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையை மக்கள் நிராகரித்துள்ளார்கள் என்பது தெரிகிறது. எடப்பாடி பழனிசாமியின் தலைமை சரியில்லை. ஒரு காரியத்தை நாம் ஒப்படைக்கும் போது தகுதி, திறமையை பார்ப்போம். அது எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை.

தாயுள்ளோம் கொண்ட தலைமை தேவை
அதிமுகவுக்கு இப்போது தாயுள்ளோம் கொண்ட தலைமை தேவை. ஒரு இயக்கத்திற்கு தலைமை ஏற்கும் போது, சொந்த விருப்பு, வெறுப்புகளின்றி இயங்க வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி விருப்பு, வெறுப்போடு தலைமையில் இருந்து செயல்படுகிறார். அதனை உணர்ந்து ஓபிஎஸ் என்னை பார்க்க வந்தார்.

தலைமை மாற்றம் தேவை
இப்போதைக்கு மக்கள் செல்வாக்குமிக்க தலைவர் இல்லை. ஆனால் கொள்கைகள் மூலம் மக்கள் தொட முயற்சிக்க வேண்டும். மக்கள்தான் எப்போதும் எஜமானர்கள். எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு எதிராக ஓபிஎஸ் இருந்ததில்லை. விட்டுக்கொடுத்து சென்றுள்ளார். இனி கட்சியை காப்பாற்றுவது கடினம். அதனால் தலைமை மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது.

பாஜகவுக்கு சாதகம்
ஓபிஎஸ்-ன் முயற்சி முதல் கட்டத்தில் தான் இருக்கிறது. அதனால் காத்திருந்துதான் செயல்பட வேண்டும். இதேபோக்கில் அதிமுக சென்றால், நிச்சயம் அழிவுபாதைக்கு தான் செல்லும். அதிமுகவை மீட்க வேண்டும் என்றால், தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். திமுகவுக்கு வாக்களிக்க மாட்டேன் என்று சொல்லும் ஒரு பிரிவினர், அதிமுகவுக்கு வாக்களிக்கிறார்கள். ஆனால் அதிமுக சீரழிகிறது என்று வாக்காளர்கள் நினைத்தால், அது பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications