கரையுமா ’வெல்ல’ம்! தூண்டில் போட்ட எடப்பாடி & கோ! ஓபிஎஸ் கடைசி நம்பிக்கை கைகூடுமா? கிளைமேக்ஸ் தான்!
சென்னை : ஓபிஎஸ் தரப்பில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை வளைக்க சீனியர்களுக்கு இபிஎஸ் உத்தரவிட்ட நிலையில் அது ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் மீதமிருக்கும் தலைவர்களையும் தட்டி தூக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கின்றனர் இபிஎஸ் தரப்பு சீனியர்கள்
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தற்போதைய சூழலில் அதிமுகவை கைப்பற்றி விட்டதாகவே கூறப்படும் நிலையில் அவருக்கு இருக்கும் ஒரே பிரச்சனை ஓபிஎஸ் மட்டும்தான். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பொதுக்குழுவில் ஓபிஎஸ் நிச்சயம் கலந்து கொண்டாக வேண்டும்.
ஆனால் பொதுக்குழு நடப்பது உறுதியாகிவிட்ட நிலையில் ஓபிஎஸ் பங்கேற்பாரா? பங்கேற்றாலும் என்ன செய்வார்? என்பது புரியாத புதிராகவே உள்ளது. ஆனாலும் தனக்கு கட்சியில் எவ்வளவு செல்வாக்கு இருக்கும் என்பதை எதிர்பார்த்து இருந்த எடப்பாடி திட்டமிட்டு காய் நகர்த்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவு வட்டம்
கடந்த வார தொடக்கத்தில் அதிமுக அலுவலகத்தில் நடந்த பிரச்சனையின் போது ஓபிஎஸ் மிகவும் தெம்புடன் தான் இருந்தார். காரணம் தனக்கு பாதிக்குப் பாதி மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் தனக்கு ஆதரவாய் இருப்பதாய் உணர்ந்து இருந்த ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி நிச்சயம் தனது கட்டுப்பாட்டுக்குள் வருவார் என எதிர்பார்த்தார். நாட்கள் செல்ல செல்ல அதிமுகவில் காட்சிகள் மாறின. ஒவ்வொரு நாளும் எடப்பாடிக்கான ஆதரவு வட்டம் பெருகிக் கொண்டே சென்ற நிலையில் ஓபிஎஸ்-ன் ஆதரவு வட்டம் கட்டெறும்பானது.

எண்ணிக்கை குறைந்தது
வைத்திலிங்கம் கேபி முனுசாமி மனோஜ் பாண்டியன், ரவிச்சந்திரன், மைத்ரேயன் நத்தம் விஸ்வநாதன் வேளச்சேரி அசோக், உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் தன் பக்கம் இருந்ததால் தெம்பில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் கனவு சுக்குநூறாக உடைந்து போனது. பொதுக்குழுவுக்கு நேரம் நெருங்க நெருங்க எடப்பாடியின் கை ஓங்குவது உணர்ந்த பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் சாய்ந்தனர். 15 ஆக இருந்த ஓ பன்னீர் செல்வத்தின் மாவட்ட செயலாளர்கள் ஆதரவு எண்ணிக்கை அடுத்து 11 ஆக குறைந்தது.

6 மாவட்ட செயலாளர்கள்
நேற்று திருவள்ளூர் அலெக்சாண்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5 பேர் எடப்பாடி பக்கம் தாவிய நிலையில் இன்று ஓபிஎஸ்-ன் வலதுகரம் போல செயல்பட்ட வேளச்சேரி அசோக்கும், மைத்ரேயனும் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தார். தலைமைக் கழக நிர்வாகிகளைத் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்த்த போது அம்மா பேரவை எம்ஜிஆர் இளைஞர் அணி தகவல் தொழில்நுட்ப பிரிவு இளைஞர் இளம்பெண்கள் பாசறை என ஒட்டுமொத்த நிர்வாகிகளும் எடப்பாடி பக்கம் சாய்ந்தனர். தற்போதைய நிலையில் ஓ பன்னீர் செல்வத்துக்கு தேனி சையது கான், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன், கன்னியாகுமரி கிழக்கு அசோகன், தஞ்சாவூர் வைத்தியலிங்கம், தஞ்சாவூர் வடக்கு சுப்பிரமணி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன், ஆகிய 6 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு மட்டுமே உள்ளது.

வெற்றி உற்சாகம்
ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பு மாவட்ட செயலாளர்களை எப்படியாவது பேசி தங்கள் தரப்புக்கு கொண்டுவந்துவிட வேண்டும் என்ற எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவை சீனியர்கள் வெற்றிகரமாக செய்து முடித்ததன் விளைவே ஐந்து மாவட்ட செயலாளர்களின் முகாம் தாவினர். இந்நிலையில் தற்போது இனிப்பான பெயரைக் கொண்ட மத்திய மாவட்டத்தின் செயலாளர் ஒருவரிடம் தீவிரமாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவரும் ஓரளவு எடப்பாடி பக்கம் தான் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரது ஆதரவு வட்டம் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போகிற போக்கை பார்த்தால் ஓபிஎஸ் தவிர அனைவருமே பழனிச்சாமி பக்கம் தாவி விடுவார்கள் என அடித்துக் கூறுகின்றனர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ரத்தத்தின் ரத்தங்கள்.












Click it and Unblock the Notifications