தினுசு தினுசா பிரச்சனை வருதே.. ஈபிஎஸ் டீம் ‘மாஜி’ சொன்ன வார்த்தையால் சிக்கல்.. பதறியடித்து நீக்கம்!
சென்னை : நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் ஒப்பிட்டு ஓ.பன்னீர்செல்வத்தை கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவிட்ட அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான வைகைச் செல்வனுக்கு சிவாஜி சமூக நலப் பேரவை கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தனது பதிவை நீக்கியுள்ளார் வைகைச்செல்வன்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கூட்டிய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை சிவாஜி கணேசன் படத்தோடு ஒப்பிட்டு தனது ட்விட்டர் பதிவில் கிண்டல் செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன். அந்தப் பதிவுக்கு சிவாஜி ரசிகர்கள் கொந்தளித்தனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனை கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டார் நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் சந்திரசேகரன். இதனையடுத்து தனது ட்விட்டர் பதிவை நீக்கியுள்ளார் வைகைச்செல்வன்.
ஒற்றைத் தலைமையே.. வா.! வா.! இரட்டைத் தலைமையே.. போ.! போ.! - அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்
போட்டிக்கு போட்டி
கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். அந்தக் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஈபிஎஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினர். இதையடுத்து அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்தித் தொடர்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஓபிஎஸ் - சிவாஜி படம்
இந்நிலையில், ஒபிஎஸ் - ஈபிஎஸ் நடத்திய இந்த இரு கூட்டங்களையும் ஒப்பிட்டு விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தனது ட்விட்டர் பதிவில், "எடப்பாடி பழனிசாமி கூட்டிய மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எம்.ஜி.ஆர் படம் போல நூறு நாட்கள் ஓடக்கூடியது. ஓ.பன்னீர்செல்வம் கூட்டிய மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சிவாஜி படத்தைப் போல, நடிப்பை ரசிப்பார்கள், ஆனால் படம் எதிர்பார்த்த அளவு ஓடாது" என்று குறிப்பிட்டிருந்தார்.
சிவாஜி ரசிகர்கள் கொந்தளிப்பு
இந்த பதிவால் சிவாஜி ரசிகர்கள் கொந்தளித்தனர். இது தொடர்பாக நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் விடுத்த அறிக்கையில், "இப்போது அதிமுகவில் யார் கூட்டும் பொதுக்குழு பெரியது, எந்தக் கூட்டம் ஒரிஜினல், எந்தக் கூட்டம் டூப்ளிகேட், ஆட்சியிலிருந்தபோது யார் ஊழல் செய்து அதிகம் சம்பாதித்தது போன்ற சண்டைகள்தான் மீடியாக்கள் மட்டுமின்றி, நீதிமன்றங்கள் வரை சந்தி சிரித்துக் கொண்டிருக்கின்றன. அது அவர்களுடைய உட்கட்சி விவகாரம் என்பதால் அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால், இவர்களின் சச்சரவில் தேவையில்லாமல் நடிகர் திலகம் சிவாஜி பெயரையும் இழுத்திருப்பதுதான் கண்டிக்கத்தக்கது.
இதுதான் லட்சணம்
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் ட்விட்டர் பதிவில், 'ஈபிஎஸ் கூட்டிய கூட்டம் எம்.ஜி.ஆர் படம் போல ஓடக்கூடியது என்றும், ஓபிஎஸ் கூட்டிய கூட்டம் சிவாஜி படம் போல ஓடாதது' என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இவர் சொல்லுகின்ற அந்தக் கூட்டத்தில்தான் யாரோ ஒரு லட்சம் ரூபாயைப் பிக்பாக்கெட் அடித்துவிட்டார்களாம். இதுதான் இவர்கள் கூட்டிய கூட்டத்தின் லட்சணம்.
எம்ஜிஆர் பற்றி பேசுவோமா
சிவாஜி தான் திரையுலகில் கோலோச்சிய காலம் மட்டுமல்ல, மறைந்து 21 ஆண்டுகளாகியும் இன்றும் அவருடைய திரைப்படங்கள் வசூலைக் குவித்துக் கொண்டிருக்கின்றன என்பதை தமிழகம் அறியும். பதவி சுகத்திற்கும், பணம் சம்பாதிப்பதற்கும், தேவைப்படும்போது மட்டும் எம்.ஜி.ஆர் பெயரைப் பயன்படுத்தும் இவரைப் போன்றவர்களுக்கு வேண்டுமானால் வரலாறு மறந்திருக்கலாம். மறைந்த ஒரு தலைவரைப் பற்றி பேசவேண்டாம் என்று இருந்தாலும் வீணாக இவர்களுடைய குழாயடிச்சண்டையில், நடிகர் திலகத்தை இழுத்தால் எம்.ஜி.ஆர் பற்றியும் பல விஷயங்களை நாங்களும் பொதுவெளியில் வெளியிட வேண்டியிருக்கும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவிக்க விரும்புகிறோம்.
அதிமேதாவித்தனம்
வைகைச்செல்வன் முதலில், எம்.ஜி.ஆரின் திரையுலக மற்றும் அரசியல் அந்தரங்கங்களை அம்பலப்படுத்தும் வகையில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய 'எம்.ஜி.ஆரின் உள்ளும் புறமும்' என்ற நூலைப் படித்துத் தெரிந்து கொண்டுவிட்டு, அப்புறம் அவருடைய அதிமேதாவித்தன ஒப்பீடுகளைச் செய்தால் நல்லது" என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், ஓபிஎஸ் கூட்டிய மா.செக்கள் கூட்டத்தை சிவாஜி படத்தோடு ஒப்பிட்ட தனது ட்விட்டர் பதிவை நீக்கியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்.