கருணாநிதியாலேயே முடியல.. ஸ்டாலினால் முடியுமா? - மேடையிலேயே சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!
சென்னை : அதிமுகவை அழிக்க கருணாநிதியால் கூட முடியவில்லை, ஸ்டாலினால் முடியுமா என ஆர்ப்பாட்டத்தில் முழங்கியுள்ளார் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
Recommended Video
தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு அதிமுக ஆர்ப்பாட்டத்தால் நடுங்கி வருவதாகவும், அதன் காரணமாகவே பொய் வழக்குப் போடுவதாகவும் விமர்சித்துள்ளார்.

அதிமுக ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் அ.தி.மு.கவினர் கடந்த திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் போராட்டம்
சென்னையில் இன்று அ.தி.மு.க சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி பேச்சு
அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "எல்லா வரியையும் உயர்த்திய ஒரே அரசு திமுக தான். 14 மாதம் திமுக ஆட்சியில் விலைவாசி, சொத்து வரி, மின்கட்டணம் என எல்லாவற்றிலும் வரி உயர்ந்துள்ளது. வரி உயர்வால் மக்கள் துன்பமடைந்து வருகின்றனர். நிர்வாகத் திறனற்ற விடியா அரசாக உள்ளது திமுக அரசு.

அதிமுக வளர்ச்சியை தடுக்க முடியாது
மக்களுக்கு நல்லது செய்வதை விட்டுவிட்டு, அதிமுகவை அழிக்கப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின். உங்களுக்கு ஆட்சி அதிகாரம் வழங்கியது எதிர்க்கட்சியை அழிப்பதற்கு அல்ல. அதிமுகவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. காற்றுக்கு தடை போட முடியாது. அதுபோல அதிமுகவின் வளர்ச்சிக்கு ஒருபோதும் யாராலும் தடை போட முடியாது.

ஸ்டாலினால் முடியுமா?
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா சாதாரணமாக தலைமைப் பொறுப்புக்கு வந்துவிடவில்லை. பல்வேறு இன்னல்களை அளித்தனர். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் உருவாக்கிய கட்சியை இன்று அழிக்க பார்க்கிறார்கள். இரு பெரும் தலைவர்கள் உருவாக்கிய அதிமுகவை அழிக்க கருணாநிதியால் கூட முடியவில்லை. ஸ்டாலினால் முடியுமா?

மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு
அதிமுகவை சாதாரணமாக நினைத்துவிட்டீர்களா? தொண்டர்கள் உழைப்பால் உயர்ந்த கட்சி இது. எந்தவொரு இயக்கத்திற்கு வலிமை இருக்கிறதோ, அது தொண்டர்களாலும் மக்களாலும் கிடைக்கிறது. நான் ஆட்சிக்கு வந்தபோது 3 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என ஆரூடம் கூறினார்கள். ஆனால் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு நான்கரை ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை தந்தோம்.

ஸ்டாலின் நடங்குகிறார்
எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை துணிவோடு எதிர்கொள்வோம். விபத்திலே ஆட்சிக்கு வந்த கட்சி திமுக. ஏமாந்து ஓட்டு போட்டு விட்டதாக மக்கள் கூறுகின்றனர். அதிமுக ஆர்ப்பாட்டத்தால் முதல்வர் ஸ்டாலின் நடுங்கிக் கொண்டிருக்கிறார். அதன் வெளிப்பாடாகவே தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு வருகின்றனர்.

பதிலைக் காணோம்
திமுகவை பொறுத்தவரை ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு. இது தான் திராவிட மாடலா? ஈவு இரக்கம் இல்லாமல் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார் ஸ்டாலின். மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த சொன்ன கடிதம் எங்கே என்று கேட்டோம். இதுவரை பதில் இல்லை. 100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய திமுக அரசு திட்டமிட்டுள்ளது.

எதிர்கொள்ளத் தயார்
சிமென்ட் ஆலைகளை திமுகவினர் நடத்துவதால் அதன் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. திமுக அரசின் செயல்பாடு மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுகவை பலவீனப்படுத்த திமுக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்கொள்ளத் தயார். அதிமுக எழுச்சி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும்" எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications