சென்னையில் 5-வது நாளாக தொடரும் மாலை நேரத்து மழை.. சில இடங்களில் கனமழை.. மக்கள் உற்சாகம்
சென்னை: தலைநகர் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் மழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வடக்கு வங்கக்கடலில் வரும் 30-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் வளி மண்டல சுழற்சி ஏற்பட்டு, தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
வெப்பச்சலனம், தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு குறிப்பாக,, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தலைநகர் சென்னையில் கடந்த 5 நாட்களாகவே மாலை மற்றும் இரவு வேளைகளில், மிதமானது முதல் பலத்த மழை பெய்கிறது. குறைந்தபட்சம் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை பெய்வதால் தலைநகர்வாசிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
அந்த வகையில் இன்று மாலை 5 மணிக்கு மேல் நகரின் பல இடங்களை கருமேகம் சூழ்ந்தது. வடபழனி, அரும்பாக்கம், சூளைமேடு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை முதல் மிதமான மழை பெய்தது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான #மழை பெய்கிறது
— Oneindia Tamil (@thatsTamil) June 28, 2019
சென்னை பெருங்குடியை சுற்றியுள்ள இடங்களில் கனமழை பெய்கிறது
எழும்பூர், சென்ட்ரல், வேளச்சேரி, ஆதம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மழை #chennairains #chennairain pic.twitter.com/QUQS09Bmjg
சென்னை எக்மோர், சென்ட்ரல், பாரிஸ் கார்னர், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, டிஎம்எஸ்,அடையாறு, திருவான்மியூர் வள்ளுவர் கோட்டம், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் அலுவலகம் முடிந்து வீடு திரும்பியோர் சற்று அவதிக்குள்ளாயினர்.
சென்னை பெருங்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வேளச்சேரி, ஆதம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து 5 நாட்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவது மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.