அதிமுக அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்..ஸ்டாலின் புகார்
சென்னை: பெரம்பலூரில் நடைபெற்றுள்ள பாலியல் குற்றங்களில் தீவிர விசாரணை நடத்தி, உரிய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்டாலின், பொள்ளாச்சி விவகாரத்தில் தமிழக அரசு அடைந்த படுதோல்வி தற்போது பெரம்பலூர் விவகாரத்திலும் தொடர்வதாக குற்றம்சாட்டியுள்ளாா். பெரம்பலூர் பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை காப்பாற்ற, தமிழக அரசு முயற்சிப்பதாகவும் சாடியுள்ளார்.
பொள்ளாச்சி கொடுமைக்கே இன்னும் நீதி கிடைக்காத நிலையில், பெரம்பலூரில் பெண்களிடம் பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
பொள்ளாச்சி வழக்கை முடிந்தவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் மூலம் விசாரித்து, ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளிகளுக்கு எதிரான ஆதாரங்களை எல்லாம் அழித்து விட்டு, பிறகு சி.பி.ஐ.யிடம் வழக்கு விசாரணையை ஒப்படைக்கலாம் என்றோ, பெரம்பலூர் வழக்கினை மூடி மறைத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ.வை காப்பாற்றி விடலாம் என்றோ முதல்வர் பழனிசாமி கனவில் கூட நினைத்துவிடக்கூடாது என்று எச்சரிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அங்க எப்படி இருக்கு நிலவரம்.. காங்கிரஸ் ஜெயிச்சுரும்ல..லோக்சபா தேர்தலில் தீவிர ஆர்வம் காட்டும் திமுக
பெரம்பலூர் பாலியல் புகார்களை தீவிரமாக விசாரித்து அப்பாவிப் பெண்களிடம் பாலியல் வன்முறை செய்த காமக்கொடூரர்களை தயவு தாட்சண்யமின்றி கைது செய்ய வேண்டும். பொள்ளாச்சி பாலியல் வழக்கை விரைந்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்திடவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்
மே 23-க்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது பொள்ளாச்சி ,பெரம்பலூர் வழக்குகளை போன்றவற்றை நீர்த்துப் போக வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அதற்குத் துணை போன அதிகாரிகள் ஆகியோர் பற்றி தனி விசாரணை நடத்தப்படும்.
இரு வழக்கிலும் உள்ள உண்மைக் குற்றவாளிகள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும், யாருக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.