எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸுக்கே சவால் விடும் குலசை ராக்கெட் ஏவுதளம்! கனிமொழி - மயில்சாமி சந்திப்பு
சென்னை: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையும் திட்டம் குறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுறை, திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழியை சந்தித்து பேசியுள்ளார்.
இந்தியாவில் அனைத்து விண்வெளி திட்டங்களும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்துதான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசு சார்பில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 1300 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள பணிகளை வேகமாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ராக்கெட் ஏவுதளம் அமைப்பதால் என்ன பயன்?
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையும் பட்சத்தில், தென் தமிழகத்தில் தொழில் வளம் பெரும் வளர்ச்சியை எட்டுவதோடு, நேரடியாகவும் மறைமுகமாகவும் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல், ராக்கெட் உரிதி பாகங்களை தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள் தென் தமிழகத்தில் உருவாகும் வாய்ப்புகள் அதிகமுள்ளது என்று கூறப்படுகிறது.

எலான் மஸ்க்-கும், ராக்கெட் ஏவுதளமும்
உலக அளவில் சிறிய ரக ராக்கெட் ஏவுதளம் வைத்திருப்பதில் டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலன் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் தளம் தான் முக்கியமானதாக உள்ளது. இதன் மூலம் சுமார் 42,000 செயற்கைகோள்களை நிறுவ திட்டமிட்டிருக்கிறார். ஆனால், குலசேகரப்பட்டிணத்தில் ஏவு தளம் அமைந்தால் ஸ்பேஸ் எக்ஸ்சை விட அதிவேகமாகவும் அதிக எண்ணிக்கையிலும் நாம் செயற்கை கோள்களை விண்ணில் ஏவ முடியும்.

குலசேகரப்பட்டிணத்தால் என்ன லாபம்?
குலசேகரப்பட்டிணம் பூமத்தியரேகைக்கு அருகே உள்ளதால், ராக்கெட் மூலம் ஏவப்பட்டு செயற்கைக்கோள் விண்வெளியில் நிலை நிறுத்த குறைந்த அளவிலான எரிபொருளே செலவாகும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் குறைந்த செலவாகும் என்பதால், உலக நாடுகளுக்கு குலசேகரப்பட்டிணத்தில் இருந்து அதிகளவில் செயற்கைகோள்களை ஏவ முடியும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

கனிமொழி - மயில்சாமி அண்ணாதுரை சந்திப்பு
இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்ட எம்.பி. கனிமொழியுடன் இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை சந்தித்து ராக்கெட் ஏவுதளம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த ஆலோசனையின் போது, ராக்கெட் ஏவுதளம் அமைவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கனிமொழியிடம் எடுத்து கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேட்டறிந்த கனிமொழி எம்.பி., ராக்கெட் ஏவுதளம் அமையும் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசுவதாக உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications