'ரெய்டுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன்னு... நான் எப்போ சொன்னேன்..' வைரலாகும் மாஃபா பாண்டியராஜன் ட்வீட்
சென்னை: முன்னாள் அமைச்சர் வேலுமணி போன்றவர்களை அச்சுறுத்தினாலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியதாகத் தகவல் பரவி வரும் நிலையில், அதை அவரே மறுத்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ் பி வேலுமணி. கொங்கு மண்டலத்தில் மிகவும் பவர்புல்லான அமைச்சராக வலம் வந்தவர் இவர்,
தேர்தல் பிரசாரத்தின் சமயத்திலேயே, வேலுமணி தனது அதிகாரத்தைப் பயன்படுத்திப் பல கோடி ரூபாயை முறைகேடாகச் சேர்த்துள்ளதாகவும் திமுக ஆட்சியில் இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

எம் ஆர் விஜயபாஸ்கர்
ஆட்சி பொறுப்பேற்ற சமயத்தில் கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்ததால் அப்போது வேறு எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமலிருந்தது திமுக அரசு. இதனிடையே கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தவுடன் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன. இதில் முதலில் சிக்கியவர் எம் ஆர் விஜயபாஸ்கர். அவருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய ரெய்டுக்கு பின்னரே, அதிமுக தலைமை ஓபிஎஸ் - இபிஎஸ் டெல்லி சென்று பாஜகவின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்,

எஸ் பி வேலுமணி
இந்தச் சூழலில் திமுக அரசின் அடுத்து டார்கெட் செய்துள்ளது எஸ் பி வேலுமணி. பல ஆண்டுகளுக்கு முன் திமுகவின் ஆர்.எஸ். பாரதியும் அறப்போர் இயக்கமும் வேலுமணி மீது ஊழல் புகார் அளித்திருந்தனர். அதிமுக அரசு இருந்த வரை அந்த புகார்களில் எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், அதைக் கையில் எடுத்த தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தினர். எஸ் பி வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதிமுக தாக்கு
நேற்று ரெய்டு நடந்த போதே அதிமுக ஆதரவாளர்கள் ரெய்டு நடைபெறும் இடங்களை முற்றுகையிட்டனர். இது தொடர்பாக 10 அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் அதிமுக தலைமை இந்த சோதனைகளைக் கடுமையாக விமர்சித்திருந்தது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த ரெய்டு நடத்தப்படுவதாகவும், பழி வாங்குவதை விட்டுவிட்டு மக்கள் நளன் சார்ந்த திட்டங்களை திமுக அரசு முன்னெடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தது.

அடுத்து யார்
அதேபோல முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பல அதிமுக தலைவர்களும் இந்த ரெய்டுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். அதேநேரம் மற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் திமுக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. அடுத்தகட்டமாக யார் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என்பது குறித்து பலவேறு வியூகங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

அச்சுறுத்த முடியாது
இந்தச் சூழலில், "வேலுமணி போன்றவர்களை இந்த அரசு ரெய்டு நடத்தி அச்சுறுத்த முடியும். என்னை ஒன்றும் செய்ய முடியாது" என்று நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியதாக நேற்று தகவல் வெளியானது. முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்துகொண்டிருந்த போதே மாஃபா பாண்டியராஜன் பேசியதாக இந்தத் தகவல் வெளியானதால், ட்வீட்டரில் இது வைரலானது.

மாஃபா பாண்டியராஜன் மறுப்பு
சிலர் மாஃபா பாண்டியராஜனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை டேக் செய்தே இந்த தகவலைப் பகிர்ந்திருந்தனர். அப்படி வைரலான ஒரு ட்வீட்டிற்கு மாஃபா பாண்டியராஜனே பதில் அளித்திருந்தார். அதாவது எங்கும் தான் இதுபோல சொல்லவில்லை என்றும் இது போன்ற போலி செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் பதிவிட்டிருந்தார். அடுத்த எந்த முன்னாள் அமைச்சரின் வீட்டில் ரெய்டு நடைபெறும் என்று பரவிக் கொண்டிருக்கும் பட்டியலில் மாஃபா பாண்டியராஜனின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், ரெய்டு குறித்துத் தான் எதுவும் சொல்லவில்லை என்று மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளது வைரலாகியுள்ளது.












Click it and Unblock the Notifications