ரஞ்சியில் வெளுத்து வாங்கியும் பயனில்லை.. சர்ஃபராஸ் கான் தேர்வாகாதது ஏன்? கொந்தளிக்கும் ரசிகர்கள்!
சென்னை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டதும், சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்படாததும் ரசிகர்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஞ்சி சீசனில் வெளுத்து வாங்கியுள்ள சர்ஃபராஸ் கான், ஏன் இந்திய அணிகாக தேர்வு செய்யப்படவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி தேர்வுக் குழு சில நல்ல வீரர்களுக்கு வாய்ப்பையும், சில வீரர்களை புறக்கணிக்கவும் செய்துள்ளது.
முதலில் நல்ல வீரர்களுக்கான வாய்ப்பு என்று பார்க்கும் போது இந்திய டி20 கிரிக்கெட் அணியை முழுக்க முழுக்க ஹர்திக் பாண்டியா தலைமையில் உருவாக்க பிசிசிஐ விரும்புவது தெளிவாகியுள்ளது.
டான் பிராட்மேனுக்கு டஃப் கொடுக்கும் இளம் வீரர்..இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலம்.. சர்ஃபராஸ் கான்!
பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் மீண்டும் பிரித்வி ஷா மற்றும் ருதுராஜ் கெய்க்வாடிவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் பவர் ப்ளே ஓவர்களில் அதிக பந்துகளை வீணடிப்பதால், நிச்சயம் சேவாக் போல் அதிரடி ஆட்டத்திறனை வெளிப்படுத்தும் பிரித்வி ஷாவிற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இஷான் கிஷனின் ஃபார்ம் பெரிய அளவில் இல்லை என்பதோடு, கன்சிஸ்டன்ஸி பிரச்சினை தொடர்ந்து வருகிறது. இதனால் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பிரித்வி ஷா இருவருக்குமே வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
சஞ்சு சாம்சன் தேர்வாகதது ஏன்?
ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் காயம் காரணமாக தேர்வு செய்யப்படவில்லை. அதனால் ஜித்தேஷ் ஷர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் வரும் தொடர்களிலும் இளம் இந்திய அணியே தொடரும் என்பது நிச்சயமாகியுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர். ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரு போட்டிகளுக்கான டெஸ்ட் தொடரில் இந்திய தேர்வுக் குழுவின் நடவடிக்கை விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யகுமார் தேர்வு சரியா?
அதற்கு மிடில் ஆர்டரில் விளையாடும் சர்ஃபராஸ் கானுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டது விமர்சனத்தை பெற்று வருகிறது. ஏனென்றால் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருவதால், அவருக்கு மாற்றாக இடதுகை ஆட்டக்காரரான இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் மற்றொரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரஞ்சியில் சர்ஃபராஸ் கான்
இவர்களின் தேர்வு காரணமாக ரஞ்சி டிராபி கிரிக்கெட் விளையாட்டு வீரர்களில் வேறு யாரும் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் இல்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஏனென்றால் 2021-22ம் ஆண்டுக்கான ரஞ்சி சீசனில் மட்டும் சர்ஃபராஸ் கான் 122.75 சராசரியோடு 982 ரன்களை குவித்துள்ளார். அதேபோல் நடப்பு ரஞ்சி சீசனில் 107.75 சராசரியோடு 431 ரன்களை குவித்துள்ளார். சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்படாதது குறித்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவே தனது ட்விட்டர் பதிவில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சொதப்பல்
இருப்பினும் சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்படாததற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது.ரஞ்சி டிராபியில் சிறப்பாக ஆடிய சர்ஃபராஸ் கான், இந்திய ஏ அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். அதில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக ஆடிய 7 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 34.16 சராசரியோடு 205 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவருக்கு சர்வதேச தரத்திலான பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்று பார்க்கப்படுகிறது.