சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் கொண்டுவரப்படாது என உறுதி வேண்டும்.. விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சேலம்: சேலம் மாவட்டம் பூலாவரி அருகே உள்ள பூஞ்சைக்காடு பகுதியில் சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த திட்டத்தை அரசு கைவிட வலியுறுத்தியும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கால்நடைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை - சேலம் இடையே எட்டு வழிச்சலை அமைக்கும் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டது.
10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்திற்காக சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

விவசாயிகள் எதிர்ப்பு
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திட்டத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். தொடர்ந்து போராட்டம் வலுத்ததால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதை அதிமுக அரசு நிறுத்தி வைத்தது.

மீண்டும் செயல்படுத்த
இந்த நிலையில், எட்டு வழிச்சாலை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால், விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சாலை விரிவாக்கம் என்பது தவிர்க்க முடியாது என தமிழக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தது விவசாயிகளை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கால்நடைகளுடன் ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில், சென்னை- சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் இனிமேல் கொண்டு வரப்படாது என அரசு உறுதி அளிக்க கோரி சேலம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம் மாவட்டம் பூலாவரி அருகே உள்ள பூஞ்சைக்காடு பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கால்நடைகளுடன் சேர்ந்து சேலம்- சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்படாது என அரசு உறுதியளிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முழுமையாக கைவிட வேண்டும்
சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தப்படி 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்று அரசு உறுதியளிக்க வேண்டும் என்றும் இந்த எட்டு வழிச்சாலை திட்டத்தை அரசு முழுமையாக கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.












Click it and Unblock the Notifications