கொடியால் பாஜக நிர்வாகிக்கு அடி.. கால்பந்து பார்க்க வீடு! ஆக்கிரமித்த பேனர்கள் -இது கேரளாவா? கத்தாரா?
சென்னை: கால்பந்து உலகக்கோப்பை போட்டிகள் கத்தாரில் தொடங்கி இருப்பது உலக ரசிகர்களின் கவனத்தை திருப்பி இருக்கும் நிலையில் இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் கேரளாவில் கால்பந்து கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன.
கடந்த நவம்பர் 20 ஆம் தேதி பிபா உலகக்கோப்பை 2022 கால்பந்து தொடர் அரேபிய நாடான கத்தாரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
டிசம்பர் 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் விளையாட தகுதிபெற்ற சர்வதேச அணிகள் கத்தாருக்கு வருகை தந்து இருக்கின்றன.
Fact Check ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியை காண 50 ஜிபி டேட்டா இலவசமா? நம்பாதீங்க பொய் செய்தி!
உலகக்கோப்பை கால்பந்து தொடர்
இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து முடிந்து குரூப் சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. குரூப் ஏ முதல் குரூப் எச் வரை 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு 32 அணிகள் இதில் விளையாடி வருகின்றன. குரூப் ஏவில் கத்தார், ஈகுவடா, செனெகல், நெதர்லாந்து அணிகள் இடம்பெற்று உள்ளன.
குரூப் சுற்று
இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ் அணிகள் பி பிரிவிலும், சி பிரிவில் அர்ஜெண்டினா, சவூதி அரேபியா, மெக்சிகோ, போலந்து அணிகளும், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனீசியா அணிகள் டி பிரிவிலும், குரூப் இ-யில் ஸ்பெயின், கோஸ்டா ரிகா, ஜெர்மனி, ஜப்பான் அணிகளும் உள்ளன.
8 குழுக்கள்
பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரேஷியா ஆகிய அணிகள் குரூப் எஃப் பிரிவிலும், ஜி குரூப்பில் பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன் ஆகிய அணிகளும், போர்சுகல், கானா, உருகுவே, தென் கொரியா ஆகிய அணிகள் எச் பிரிவிலும் இடம்பெற்று உள்ளன. தற்போது குரூப் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அர்ஜெண்டினாவை வீழ்த்திய சவூதி
நேற்று நடைபெற்ற குரூப் சி பிரிவு ஆட்டத்தில் பலம் வாய்ந்த அர்ஜெண்டினா அணியை சவூதி அரேபியா அணி வெற்றி பெற்றது உலக அளவில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. பரபரப்பாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரை காண பல நாடுகளை சேர்ந்த மக்கள் கத்தாரில் திரண்டு இருக்கின்றனர்.
கேரள ரசிகர்கள்
குறிப்பாக கத்தாரில் தங்கி பணிபுரிந்து வரும் தமிழர்கள் மற்றும் மலையாளிகள் உலகக்கோப்பை மைதானத்துக்கு சென்று போட்டிகளை கண்டுகளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட கேரள மக்கள் இதற்கு கூடுதல் முக்கியத்துவத்தை வழங்கி வருகிறார்கள்.
கால்பந்துக்கு முக்கியத்துவம்
இந்திய அளவில் கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மக்களே கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்குகின்றார்கள். நம் மாநிலத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்கு எப்படி முக்கியத்துவம் வழங்கப்படுகிறதோ அதற்கு இணையான வரவேற்பு கால்பந்து தொடர்களுக்கு கேரளாவில் அளிக்கப்பட்டு வருகிறது.
கட் அவுட்டுகள்
தற்போது தொடங்கி இருக்கும் கால்பந்து போட்டிகளை காண கேரளாவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை கால்பந்து ரசிகர்கள் செய்து வருகின்றார்கள். தமிழ்நாட்டில் வானுயர வைக்கப்படும் சினிமா நடிகர்கள், அரசியல்வாதிகள் கட் அவுட்டுகளை போல் கேரளாவில் போர்சுகல் வீரர் ரொனால்டோ, அர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸி, பிரேசில் வீரர் நெய்மரின் கட் அவுட்டுகளை வைத்து உள்ளனர்.
பேனர்கள்
அதுபோல் திருமணம், அரசியல் நிகழ்வுகளுக்கு சாலை ஓரங்களில் வைக்கப்படும் பேனர்களை போல் கால்பந்து வீரர்கள் மற்றும் அணிகளுக்கு கேரளாவில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இது அல்லாமல் போர்ச்சுகல், அர்ஜெண்டினா, பிரேசில், பிரான்ஸ், பிரிட்டன் அணிகளின் ரசிகர்கள் அந்தந்த நாடுகளின் கொடிகளை ஊன்றியதுடன் வீடுகளிலும் கட்டி வைத்து இருக்கிறார்கள்.
கொடியால் விழுந்த அடி
இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர் கால்பந்து ரசிகர்களால் கட்டி வைக்கப்பட்டு இருந்த போர்ச்சுகல் நாட்டின் கொடியை எஸ்டிபிஐ கட்சியின் கொடி என்று நினைத்து அகற்ற முயன்றதால் அவரை ரொனால்டோ ரசிகர்கள் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.