இனியும் நடக்க கூடாது.. மீட்டிங்கில் முதல்வர் ஸ்டாலின் விளாசல்.. உடனடியாக பறந்த உத்தரவு.. செம பாஸ்ட்!
சென்னை: ரெமிடிஸ்வர் மருந்தின் விற்பனை குறித்து இன்று தமிழக அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்த நிலையில் இன்னொரு முக்கியமான வாய்மொழி உத்தரவும் மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன. ரெமிடிஸ்வர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக முக்கியமான வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ரெமிடிஸ்வர் மருந்து தட்டுப்பாடு நிலவி வந்தது. தமிழகத்திற்கு தினசரி 20000-22000 ரெமிடிஸ்வர் மருந்துகள் தேவைப்பட்ட நிலையில் மத்திய அரசு சார்பாக 7000 மருந்துகள் மட்டுமே அனுப்பப்பட்டு வருகிறது.
இதை தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் பிரித்து கொடுத்து வந்தது. இதன் காரணமாக மக்களிடையே ரெமிடிஸ்வர் மருந்தை வாங்க கடும் நெருக்கடி நிலவியது.

அவலம்
முக்கியமாக சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு ரெமிடிஸ்வர் விற்பனை மாற்றப்பட்டும் கூட கூட்டம் கொஞ்சம் கூட குறையவில்லை. அதிலும் நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் 200 மீட்டருக்கும் அதிகமாக கூட்டம் நின்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் பலரும் கோரிக்கை வைத்தனர்.

நடவடிக்கை
இந்த நிலையில் துரிதமாக செயல்பட்டுள்ள தமிழக அரசு தற்போது ரெமிடிஸ்வர் மருந்தை தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக கொடுக்கும் முடிவை எடுத்துள்ளது. தனியார் மருத்துவமனைகள் ஒரு இணைய போர்ட்டல் மூலம் கோரிக்கை வைக்கும். அந்த கோரிக்கையை ஆராய்ந்து மாநில அரசு ரெமிடிஸ்வர் மருந்துகளை அந்த மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும்.

கூட்டம்
இதற்காக இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் கூட்டம் நடந்தது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்னன் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இதில் ரெமிடிஸ்வர் விற்பனை மட்டுமின்றி முதல்வர் ஸ்டாலின் இன்னொரு முக்கியமான உத்தரவை போட்டு இருக்கிறார். அதோடு பல முக்கியமான கேள்விகளை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.

உத்தரவு
அதன்படி, ரெமிடிஸ்வர் மருந்தை தேவையின்றி நோயாளிகளுக்கு பரிந்துரை செய்ய கூடாது என்று வாய்மொழி உத்தரவு சென்றுள்ளது. ரெமிடிஸ்வர் மருந்து உலக சுகாதார மையம் மூலம் பரிந்துரை செய்யப்படவில்லை. கொரோனாவிற்கு எதிராக இந்த மருந்து செயல்படும் என்று உறுதியான டேட்டா எதுவும் இல்லை. தமிழக அரசு வெளியிட்ட சிகிச்சை முறையிலும் ரெமிடிஸ்வர் இல்லை.

தவறு
இப்படி இருக்கும் போது பல நோயாளிகளுக்கு ரெமிடிஸ்வர் மருந்தை பல மருத்துவர்கள் சர்வ சாதாரணமாக எழுதி கொடுக்கிறார்கள். இதுவும் கூட ரெமிடிஸ்வர் தட்டுப்பாடு ஏற்பட காரணம். கேரள போன்ற மாநிலங்களில் ரெமிடிஸ்வர் மருந்தை அரசே திரும்பி அனுப்பும் நிலையில், தமிழகத்தில் இதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இதை முறைப்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தடுப்பு
அதன்படி இனிமேல் மிகவும் அவசியம் என்றால் மட்டுமே ரெமிடிஸ்வர் கொடுக்க வேண்டும். எல்லோருக்கும் போகிற போக்கில் இந்த மருந்தை கொடுக்க கூடாது என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் கொரோனா சிகிச்சை முறை வழிகாட்டுதலில் ரெமிடிஸ்வர், ஐவர்மெக்டின் இரண்டும் அதிகாரபூர்வமாக இடம்பெறவில்லை. இருந்தாலும் மிக மிக அவசியம் என்றால் மட்டும் ரெமிடிஸ்வர் கொடுக்கலாம் என்று தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

ஆக்சிஜன்
தமிழக அரசின் அறிக்கையிலும் இது தொடர்பாக, ஆக்சிஜன் அளவு மிக குறைவாக உள்ளவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், மக்களை அலைய விட கூடாது. இனியும் இப்படி நடக்க கூடாது. கூட்டம் கூடினால் லாக்டவுன் போடுவதே வேஸ்ட்.. ரெமிடிஸ்வர் மிகவும் அவசியம் என்றால் மட்டுமே பரிந்துரைக்க வேண்டும், என்று உறுதியாக கூறியதாக தெரிகிறது.

போர்டல் பின்னணி
இன்னொரு பக்கம் எல்லா தனியார் மருத்துவமனைகளும் ரெமிடிஸ்வர் மருந்துகளை வாங்கி குவித்து, அதை கள்ள சந்தையில் விற்க கூடாது என்பதால் போர்ட்டல் ஒன்றை உருவாக்கி, அதில் தனியார் மருத்துவமனைகள் கோரிக்கைகளை வைக்கும் வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த கோரிக்கைகளை ஆராய்ந்து, முறையாக இருந்தால் மட்டுமே ரெமிடிஸ்வர் மருந்துகள் தனியார் மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications