ஹேம்நாத் உண்மையில் என்னதான் செய்தார்?.. எப்ஐஆர் கூறுவது என்ன?.. முரண்படும் தகவல்களால் குழப்பம்
சென்னை: குளிப்பதற்காக தன்னை சித்ரா வெளியே இருக்குமாறு கூறினார் என போலீஸாரிடம் ஹேம்நாத் கூறிய நிலையில் காரில் இருந்த கவரை எடுத்து வர ஹேம்நாத்தை வெளியே அனுப்பியதாக சித்ராவின் தந்தை அளித்த புகாரின் முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆர்) குறிப்பிட்டுள்ளதால் ஹேம்நாத் உண்மையில் என்னதான் செய்தார் என்ற குழப்பம் எழுந்துள்ளது.
நடிகை சித்ரா நேற்ற முன் தினம் பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள், நண்பர்கள் என குற்றம்சாட்டினர்.
சித்ராவின் தாயும், தனது மகளை ஹேம்நாத்தான் அடித்து கொன்றுவிட்டார் என ஊடகங்களில் பகிரங்கமாக தெரிவித்தார். இந்த நிலையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் அவர் தூக்கிட்டுதான் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் உறுதிப்படுத்தினர்.
சித்ராவை சொந்த மகளாகவே நடத்தினோம்.. மகன் மீது அபாண்டமாக பழி.. ஹேம்நாத் பெற்றோர்
சித்ரா கதவு
ஆனால் தூக்கிட்டு கொள்ளும் அளவுக்கு அவருக்கு என்ன பிரச்சினை? அவரை தற்கொலைக்கு தூண்டிவிட்டது யார் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஹேம்நாத்திடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் குளிப்பதற்காக தன்னை அறைக்கு வெளியே காத்திருக்குமாறு கூறிய சித்ரா கதவை தாழிட்டு கொண்டார்.
முரண்பட்ட கருத்து
நீண்ட நேரமாகியும் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் நான் ஹோட்டல் ஊழியர் உதவியுடன் மாற்றுச் சாவி போட்டு கதவை திறந்து பார்த்த போது அவர் தற்கொலை செய்து கொண்டிருந்தார் என ஹேம்நாத் போலீஸாரிடம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சித்ராவின் தந்தை காமராஜ் போலீஸில் அளித்த புகாரில் முதல் தகவல் அறிக்கையில் முரண்பட்ட கருத்து வெளியாகியுள்ளது.
சித்ராவுக்கு திருமணம்
அந்த புகாரில் காமராஜ் கூறுகையில், ஹேம்நாத்துக்கும் சித்ராவுக்கும் பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்திருந்தோம். சித்ராவிற்கு 50 பவுன் நகையும், ஹேம்நாத்திற்கு 20 பவுன் நகையும் போடுவதாக இருந்தோம். சம்பவத்தன்று இரவு எனது மனைவியிடம் சித்ரா பேசினார். அதன் பிறகு அதிகாலையில் ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் எனக்கு போன் செய்தார்.
தற்கொலை
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் நான் போனை எடுக்கவில்லை. அதன் பிறகு அவரை தொடர்பு கொண்ட போது ஹோட்டலில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் ஷூட்டிங் முடித்துவிட்டு வந்த சித்ரா காரில் உள்ள கவரை எடுத்து வருமாறு ஹேம்நாத்திடம் கூறியதாகவும் அப்போது அதை எடுக்க ஹேம்நாத் வெளியே வந்த போது அவர் தூக்கிட்டு கொண்டதாகவும் ரவிச்சந்திரன் தெரிவித்தார் என சித்ராவின் தந்தை அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளதால் போலீஸார் குழப்பம் அடைந்துள்ளனர்.
விசாரணை வளையத்தில் ஹேம்நாத்
சித்ராவின் மரணம் தற்கொலைதான் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தாலும் கூட போலீஸ் நிலையத்தில் இருந்து இன்னும் ஹேம்நாத்தை அனுப்பாமல் போலீஸார் தங்களது விசாரணை வளையத்திற்கு உள்ளேயே வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஹேம்நாத் போலீஸிடமும் தனது தந்தையிடமும் முன்னுக்கு பின் முரணாக கூறியது ஏன் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.